இசையமைப்பாளர் கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: பழம்பெரும் இசையமைப்பாளர் கோவர்தனுக்கு, வறுமையை எதிர்கொள்ளும் விதமாக, ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் அவரது செவித்திறனுக்காக காதொலிக்கருவி வழங்கவும் மருத்துவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது சேலத்தில் வசித்துவரும் பழம்பெரும் இசையமைப்பாளர் கோவர்தன், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். வறுமையில் பாதிக்கப்பட்டுள்ள இவர், உதவி கேட்டு முதல்வர் ஜெயலலிதாவிடம் விண்ணப்பம் செய்தார்.
இதையேற்று, அவருக்கு எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பாக, ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என, ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த தொகை, கோவர்தன் பெயரில் வங்கியில் வைப்புத்தொகையாக செலுத்தப்படும் என்றும், அதற்கு வட்டியாக மாதந்தோறும் அவருக்கு ரூ.8,125 கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிரபல இசையமைப்பாளர் கோவர்தன், எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, தேவா என பல புகழ்பெற்ற இசையமைப்பாளர்களிடம் உதவி இசையமைப்பாளராக பல வருடங்கள் பணியாற்றியவர் ஆவார். தற்போது தனது மனைவியுடன் சேலத்தில் வசித்து வரும் 88 வயதான கோவர்தன், தான் எவ்வித வருமானமும் இல்லாமல் வறுமைச் சூழலில் வாழ்ந்து வருவதாகவும், தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு நிதியுதவி வழங்கி தங்களைக் காப்பாற்றுமாறு அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்ருமான ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கோவர்த்தனின் வேண்டுகோளை கனிவுடன் பரிசீலித்த, முதல்வர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர்.அறக்கட்டளையில் இருந்து கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த 10 லட்சம் ரூபாய் கோவர்தன் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக வைக்கப்படும்.
இந்த வைப்பு நிதியில் இருந்து வட்டியாக மாதந்தோறும் 8,125/- ரூபாய் கோவர்தன் அவர்களுக்கு கிடைக்கப் பெறும். மேலும், கோவர்தனின் செவித்திறன் குறைபாட்டை நீக்கும் வகையில் அவருக்கு அரசு பொது மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை அளித்து, காதொலிக் கருவிஒன்றினை வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.