"அட்டாக்" பாண்டி அரெஸ்ட்... சட்டசபையில் பாராட்டிய ஜெயலலிதா
சென்னை: காவல்துறையால் தேடப்பட்டு வந்த குற்றவாளி அட்டாக் பாண்டியைக் கைது செய்த தமிழகக் காவல்துறையை, முதல்வர் ஜெயலலிதா பாராட்டியுள்ளார்.
2015-2016ம் ஆண்டிற்கான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவதாத்திற்கு பின் தமிழக முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார், அப்போது பேசிய அவர், மதுரை மாநகர், சுப்பிரமணியபுரம் காவல் நிலைய சரகம், டி.வி.எஸ்.நகரில் கடந்த 31.1.2013 அன்று இரவு சுமார் 8 மணி அளவில் திமுக¬வைச் சேர்ந்த சுரேஷ் பாபு (எ) பொட்டு சுரேஷ், அவருடைய காரில் சென்று கொண்டிருந்தபோது, டாடா ஏஸ் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரது காரை வழிமறித்து ஆயுதங்களுடன் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இதன் பேரில், சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்ட எதிரிகள் கைது செய்யப்பட்டனர். எனினும், இவ்வழக்கில் முக்கிய எதிரியான பாண்டி என்கிற அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்து வந்தார். அவரை தேடப்படும் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அட்டாக் பாண்டிக்கு எதிராக 7 பிடியாணைகள் நிலுவையில் உள்ளன. திட்டமிட்ட குற்றத்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் ஒரு குழு அட்டாக் பாண்டியின் நடமாட்டங்களை அறிய தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
மும்பையின் புறநகர் பகுதியில் இந்தக் குழு அட்டாக் பாண்டியை கண்டுபிடித்து அதன்பேரில் 21.9.2015 அன்று அவர் தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாய் இருந்த குற்றவாளியை கண்டுபிடிக்க சிறப்பாக பணியாற்றிய தமிழக காவல் துறை பாராட்டுக்குரியதாகும் என்று தெரிவித்துள்ளார்.