ஜெ. கோடநாடு பயணம்: நாடாளுமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர் பட்டியல் விரைவில்..
கோவை: தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னையில் இருந்து, நீலகிரி மாவட்டம் கோடநாடு வந்து சேர்ந்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அடுத்த சில வாரங்களுக்கு கோடாநாட்டில் இருந்து அரசு பணிகளை கவனிப்பார் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.
மதியம் 1.32 மணிக்கு கோவை வந்திறங்கிய ஜெயலலிதாவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி, எம்.எல்.ஏ.க்கள் மலரவன், ஆறுக்குட்டு, சேலஞ்சர் துரை உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதன்பின், கோவையில் இருந்து மதியம் 1.50 மணியளவில் புறப்பட்ட ஜெயலலிதா, 2.10 மணிக்கு கோடநாடு சென்றார். அங்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர். அடுத்த சில வாரங்கள் கோடநாட்டில் ஜெயலலிதா தங்கியிருந்து அரசு பணிகளை ஜெயலலிதா கவனிப்பார்.
திடீர் பயணம் என்பதாலும், சென்னையில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் என்பதாலும் அமைச்சர்கள் யாரும் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை.
விருப்பமனுக்கள்
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனுக்களை அதிமுக பெறத் தொடங்கியுள்ளது. அதிக அளவில் மனுக்கள் விற்பனையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வேட்பாளர்கள் தேர்வு
மனுக்களை பரிசீலனை செய்து, 40 தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக முதல்வர் ஜெயலலிதா கோடநாடு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘தை’யில் வேட்பாளர் அறிவிப்பு
வேட்பாளர்கள் பற்றிய பரிசீலனை முடிவடைந்து தை பொங்கல் முடிந்து வேட்பாளர்கள் பெயர் பட்டியலை முதல்வர் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
கூட்டணி கட்சிகள்
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லை என்று அறிவித்தாலும் கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதை கருத்தில் கொண்டுதான் அதிமுக சார்பில் நடைபெற்ற கிருஸ்துமஸ் விழாவில் மார்க்சிஸ்ட், இ.கம்யூனிஸ்ட், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம்.
உளவுத்துறை அறிக்கை
உளவுத்துறை எடுத்துள்ள சர்வே முடிவுகளும் அதிமுகவிற்கு சாதகமாக வந்துள்ளதாம். நான்குமுனை போட்டி அதாவது, அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என அமையும் பட்சத்தில் அதிமுக விற்கு 35 முதல் 37 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளது என்று தெரியவந்துள்ளதாம்.
மும்முனைப் போட்டி
அதேசமயம் மும்முனைப் போட்டியாக அமைந்தால் அதிமுக 27 முதல் 30 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாம். கூட்டணி அமைந்து இருமுனை போட்டியாக அமையும் பட்சத்தில் அதிமுக கூட்டணிக்கு 40 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறதாம். இதனைக் கருத்தில் கொண்டே முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பயணம் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.