சிறையை போன்றே போயஸ் கார்டனிலும் யாரையும் சந்திக்க மறுக்கும் 'அம்மா'?
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த மாதம் 27ம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 22 நாட்கள் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார். சிறையில் அவர் யாரையும் சந்திக்க விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டார். முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூட பெங்களூர் வரை சென்றும் அவரை சந்திக்க முடியாமல் திரும்பினார்.
இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்துள்ள ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் வீட்டில் யாரையும் சந்திக்க மறுக்கிறாராம். ஆனால் பன்னீர் செல்வத்தை மட்டும் சில நிமிடங்கள் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. ஆனால் இதை அதிமுகவோ, தமிழக அரசோ உறுதி செய்யவில்லை.
சிறையில் இருந்து வெளியே வந்த தனக்கு ஆறுதலாக கடிதம் எழுதிய நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா கடிதம் எழுதினார். ஆனால் தீபாவளியையொட்டி அவர் கட்சியினர் மற்றும் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. முதல்வர பன்னீர் கூட வாழ்த்து தெரிவிக்காதது அதிமுகவினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.