சிறுதாவூரில் மா.செ பட்டியல்... கொடநாட்டில் வேட்பாளர் பட்டியல்... ஜெ.வின் சூப்பர் பிளான்!
சென்னை: சிறுதாவூர் பங்களாவில் இருந்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் பட்டியலை ரிலீஸ் செய்த ஜெயலலிதா, விரைவில் கொடநாடு செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கிருந்து ஆட்சிப் பணிகளை கவனிக்கும் ஜெயலலிதா, 2016 சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களையும் தேர்வு செய்ய உள்ளதாக அதிமுக வட்டாரா தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, அ.தி.மு.க., அரசு துவக்கி உள்ளது. அதற்கு முன்னோட்டமாக, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, ஒரே இடத்தில் பணிபுரியும், ஐ.ஏ.எஸ், மற்றும், ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, தேர்தல் கமிஷன் மாற்றுவதற்கு முன், தானாகவே மாற்ற முடிவு செய்துள்ளது. எனவே, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 151 தொகுதிகளில், வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அடுத்த ஆண்டு, மே மாதத்துடன், ஐந்தாண்டு ஆட்சி நிறைவு பெறுகிறது. இப்போதே, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, அ.தி.மு.க., தலைமை துவக்கி உள்ளது.
வாக்காளர் பட்டியல்
தேர்தல் ஆணையம் சார்பில் தற்போது, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது. தகுதியான நபர்களை, வாக்காளராகச் சேர்க்கவும், அவர்களின் ஓட்டுகளை கவரவும், ஓட்டுச்சாவடி வாரியாக, அ.தி.மு.க., சார்பில், நிர்வாகிகள் களம் இறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று, வாக்காளர்களை சந்தித்து ஆதரவும் திரட்டி வருகின்றனர்.
சரியான திட்டமிடல்
எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுள்ள சூழ்நிலையில், தேர்தலுக்கு முன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை, திட்டமிட்டபடி முடித்து, 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என்ற இலக்குடன், ஆளும் தரப்பு இப்பணிகளில் முழு வீச்சில் இறங்கி உள்ளது.
மக்களை சந்திக்கும் எம்.எல்.ஏக்கள்
அரசு அறிவித்த திட்டங்களை விரைவாக முடிக்கும்படி, அனைத்து துறை அதிகாரிகளும், முடுக்கி விடப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், தொகுதி மக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்து, தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
சிறுதாவூர் சிறப்பு பூஜை
சிறுதாவூர் பங்களாவில் ஓய்வு என்று போனாலும் ஜெயலலிதா, கட்சி நிர்வாகப் பணிகளை சிறப்பாக கவனித்துள்ளார். அங்கிருந்தே அதிமுக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் பட்டியலை ரிலீஸ் செய்தார் ஜெயலலிதா. இந்த பட்டியல் 2016 சட்டசபை தேர்தலுக்கான மினி வேட்பாளர் பட்டியல் என்றே கருதப்படுவதால் நள்ளிரவில் பூஜை நடத்திதான் வெளியிட்டார்களாம்.
முக்குலத்தோருக்கு முக்கியத்துவம்
மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இரவு ஒன்றரை மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் முக்குலத்தோருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 12 மாவட்ட செயலாளர்கள் முக்குலத்தோர் சமூகத்தில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளன.
கவுண்டர், வன்னியர்
மேற்கு மாவட்டங்களில் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 10 பேருக்கு மாவட்ட செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல வடக்கு மாவட்டங்களை வளைக்க வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு மாவட்ட செயலாளர் பதவி அளித்துள்ளது.
சாதி ரீதியான வாய்ப்பு
அதேபோல உடையார் சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கும் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த 4 பேருக்கும், செட்டியார் சமூகத்தில் இருந்து இருவருக்கும் விஸ்வகர்மா சமூகத்தில் இருந்து இருவருக்கும் நாடார் , பிள்ளை , மீனவர் , படுகர் , முதலியார் , தலித் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தலா ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தொடக்க நாள் விழா
மஹாளய அமாவாசை நாளன்று கட்சியின் புது மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் ஜெயலலிதா, வரும் 17ம் தேதி அ.தி.மு.க தொடக்க நாள் விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தும் ஜெயலலிதா, மறுநாள் கொடநாடு செல்ல திட்டமிட்டுள்ளாராம். அதற்கு முன்னதாகவே அரசு நிர்வாகத்திலும் சில மாற்றங்கள் செய்ய திட்டமிட்டுள்ளார் ஜெயலலிதா.
காவல்துறையில் மாற்றம்
2016 சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. தற்சமயம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறுவதால், மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்ய முடியாது, எனினும் காவல்துறை உயரதிகாரிகளை இடம் மாற்றலாம். எனவே, முதல் கட்டமாக, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, புதிய கமிஷனராக டி.கே.ராஜேந்திரனும், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக திரிபாதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சியர் மாற்றம் எப்போது?
அடுத்த கட்டமாக, எஸ்.பி.,க்கள், ஆர்.டி.ஓ.,க்கள், தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்புகள், அடுத்தடுத்து வெளிவரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சியர்கள் இடமாற்றம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, இம்மாதம், 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதன்பின், மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமின்றி, அரசு துறைச் செயலர்களும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளிக்கல்வி உட்பட, சில துறைச் செயலர்கள் மூன்றாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கின்றனர் அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.