அதிமுக கவுன்சிலர் அதிரடி நீக்கம்: ஜெயலலிதா உத்தரவு!
சென்னை: சென்னை காட்டுப்பாக்கம் அதிமுக கவுன்சிலரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பூவிருந்தவல்லி ஒன்றியத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற 12வது வார்டு உறுப்பினர், அம்மா நகர்) கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் அதிமுகவில் கவுன்சிலர் நீக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.