நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மதுரையில் போட்டியிட வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜு தீர்மானம்
தேர்தல் பணிகள் குறித்த அதிமுக நிர்வாகிகளின் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் விபரம் வருமாறு,
மதுரை மக்களுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க பெற்று கொடுத்ததோடல்லாமல் மதுரை மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ரூ.600 கோடியை அள்ளிக் கொடுத்த முதல்வர் அம்மாவுக்கு நன்றி கடனாக முதல்வர் அம்மாவை பிரதமர் பதவியில் அமர்ந்த்தும் வகையில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் அம்மா போட்டியிட விரும்பி வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.
வருகிற 19-ம் தேதி மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முதல்வர் அம்மா பெயரில் மதுரை தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளிக்கப்படும்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களில் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு அச்சாரமாக அமைந்த ஏற்காடு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்த முதல்வர் அம்மாவுக்கும், வாக்காளப் பெருமக்களுக்கும் கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்வது, முதல்-அமைச்சர் அம்மா வின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு சர்வமத பிரார்த்தனை, ரத்ததானம், அன்னதானம் மற்றும் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் சிறப்பாக கொண்டாடுவது, கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் மதுரை மாநகர மக்களுக்காக ரூ.100 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அறிவித்த முதல்வர் அம்மாவுக்கு நன்றி தெரிவிப்பது.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் இந்தியா அனைத்து துறைகளிலும் பின்தங்கியுள்ளது. இந்த நிலையை மீட்க முதல்வர் அம்மாவால் மட்டுமே முடியும் என்று தமிழகத்தில் வாழும் 7½ கோடி மக்களும் இந்தியாவில் வாழும் 125 கோடி மக்களும் எதிர்பார்க்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிடும் வகையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்குகளை அதிமுகவுக்கு பெற்றுத்தர அனைவரும் அல்லும் பகலும் ஒற்றுமையுடன் பாடுபடுவோம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.