ஜெயா டிவியும், நமது எம்ஜிஆரும் அதிமுக சொத்து அல்ல.. சொல்வது இளவரசி மகன் விவேக்!
நமது எம்ஜிஆர் நாளிதழும், ஜெயா டிவியும் தனியார் சொத்து என ஜெயா டி.வி. தலைமை செயல் அதிகாரி விவேக் கூறியுள்ளார். இவர் இளவரசியின் மகனாவார்.
சென்னை: நமது எம்ஜிஆர் நாளிதழ், ஜெயா டிவியையும் மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு இளவரசி மகன் விவேக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளிதழ்களை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்ற முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு உடனே எதிர்தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. நாஞ்சில் சம்பத், தனியார் சொத்துக்கு உரிமை கொண்டாட ஆசைப்படலாமா என்று கேட்டார். இப்போது ஜெயாடிவியின் தலைமை செயல் அதிகாரியும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நமது எம்ஜிஆர் நாளேடும், ஜெயா டிவியும் தனியார் சொத்து என்று விவேக் ஜெயராமன் கூறியுள்ளார். தனியார் சொத்துக்களை மீட்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் நிறைவேற்ற முடியும் என்று கேட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று இளவரசி மகன் விவேக் விடுத்துள்ள அறிக்கை:
இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய சிலர் ஜெயா தொலைக்காட்சியையும் நமது எம்.ஜி.ஆரையும் மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தீர்மானம் இயற்றி இருக்கிறார்கள். இது மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஜெயா தொலைக்காட்சியும் 'நமது எம்.ஜி.ஆர்' நாளேடும் தனியார் நிறுவனங்கள். யாரும் சர்வ சாதரணமாக உள்ளே புகுந்து கைவசமாக்கக் கூடிய நிலையில் இரு நிறுவனங்களும் இல்லை.
இந்த விவரங்கள் தெரிந்திருந்தும், அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக ஜெயா தொலைக்காட்சியை மீட்கப் போவதாக தீர்மானம் இயற்றி இருப்பது மக்கள் அபிமானம் பெற்ற ஓர் ஊடகத்துக்கு விடப்பட்டிருக்கும் பகிரங்க மிரட்டலாகத்தான் தெரிகிறது.
இருப்பினும் இந்த மிரட்டல்களை நெஞ்சிறுதியோடு எதிர்த்து நிற்போம் என்று கூறியுள்ளார் விவேக் ஜெயராமன்