வளைக்கப்படுகிறது விவேக் குடும்பம் ? : சகோதரி ஷகீலாவும் வருமானவரித்துறை முன் ஆஜர்
மிடாஸ் மதுபான ஆலை முக்கிய நிர்வாகி ஷகீலாவும் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
சென்னை : ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் ஜெயராமனின் இன்னொரு சகோதரியான ஷகீலாவும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.
கடந்த வியாழக்கிழமை சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களுக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள் என 187 இடங்களில் 1800க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பல இடங்களில் சோதனை ஓரிரு நாட்களில் முடிவடைந்துவிட்ட நிலையில், இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் முக்கியப் பங்கு வகிக்கும் ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், ஜெயா டிவி அலுவலகம், விவேக்கின் மூத்த சகோதரியான கிருஷ்ணப்பிரியாவின் தி.நகர் வீடு, அவர் நடத்தி வரும் தொண்டு நிறுவனம், விவேக்கின் இன்னொரு சகோதரியான ஷகீலா முக்கிய நிர்வாகியாக இருக்கும் மிடாஸ் மதுபான ஆலை ஆகியவற்றில் ஐந்து நாட்கள் சோதனை நடந்தது.
இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பல நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீடுகள் என பலவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டு நீண்ட விசாரணைக்குப் பின் விவேக் திருப்பி அனுப்பப்பட்டார்.
இன்று விவேக் ஜெயராமனின் சகோதரிகளான கிருஷ்ணப்பிரியா மற்றும் ஷகீலா ஆகியோர் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர். இதில் ஷகீலா மற்றும் அவரது கணவர் ஆகியோர் தான் மிடாஸ் மதுபான ஆலையை நிர்வகித்து வருகிறார்கள்.
அதிமுக அணிகள் பிரிவுக்கு முன்பு வரை இந்த நிறுவனத்தில் தான் டாஸ்மாக்கிற்கான சரக்குகள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டன. கோடிக்கணக்கான பணம் புழங்கும் மிடாஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பல ஆவணங்கள் சிக்கி இருக்கின்றன. இதுகுறித்து அதிகாரிகள் இன்று ஷகீலாவிடம் விசாரிக்க இருக்கிறார்கள்.
சசிகலா குடும்பத்தின் பல்வேறு முக்கியத் தலைகளின் இடங்களில் ரெய்டு நடந்தாலும், குறிப்பாக விவேக், அவரது சகோதரிகள் கிருஷ்ணப்பிரியா மற்றும் ஷகீலா மீது வருமான வரித்துறையினரின் கை ஓங்கி இருப்பது, ஐ.டி.,யின் முக்கியக்குறி இவர்கள் மூவர் தானோ என்கிற சந்தேகத்தை கிளப்பி உள்ளது.