எங்க கொண்டு போறீங்க.. போலிசாரின் பைகளை வீட்டிற்குள் எடுத்து செல்ல விவேக்கின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு!
சென்னை மகாலிங்கப்புரத்தில் உள்ள விவேக்கின் வீட்டிற்குள் போலிசார் தங்களின் பைகளை கொண்டு செல்ல அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை: மகாலிங்கப்புரத்தில் உள்ள விவேக்கின் வீட்டிற்குள் போலிசார் தங்களின் பைகளை கொண்டு செல்ல அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலிசார் தங்களின் பைகளை வீட்டிற்கு வெளியேவே வைத்து விட்டு சென்றனர்.
சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயா டிவி மற்றும் ஜெயா டிவியின் சிஇஓ விவேக் ஜெயராமன் வீட்டிலும் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சசிகலா உறவினர்கள் வீட்டில் நடத்திய ஆய்வில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வருமான வரித்துறையின் சோதனை நீண்டுக்கொண்டே செல்கிறது.
உணவை சோதித்த ஆதரவாளர்கள்
நேற்று விவேக் வீட்டின் தண்ணீர் தொட்டி அவரது சொகுசு கார்கள் என அனைத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர். இதையடுத்து நேற்று அதிகாரிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட மதிய உணவை தடுத்த அவர்கள் உணவு பார்சலுடன் ஆவணங்கள் மறைத்து எடுத்து செல்லப்படுகிறதா என சோதித்தனர்.
பரிசோதித்ததால் பரபரப்பு
எந்த ஆவணமும் கொண்டு செல்லப்படவில்லை என்று உறுதியான பின்னரே அவர்கள் உணவை கொண்டு செல்ல அனுமதித்தனர். அதிகாரிகளின் உணவை விவேக்கின் ஆதரவாளர்கள் பரிசோதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலிசாரின் பைகள்
இந்நிலையில் போலிசார் தங்களின் பைகளை விவேக் வீட்டிற்குள் எடுத்து செல்ல அவரது ஆதரவாளர்கள் அனுமதிக்கவில்லை. பணிமாற்றத்துக்காக வந்த போலீசாரின் பைகளை உள்ளே எடுத்து செல்லக்கூடாது என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நேற்று தினகரன் கூறியது
இதையடுத்து போலிசார் தங்களின் பைகளை வெளியே வைத்து விட்டு சென்றனர். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரள் தனது பண்ணை வீட்டில் வருமான வரித்துறையினர் ஏதாவது வைத்து விட்டு எடுத்தால்தான் உண்டு என தெரிவவித்தார். இதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் இந்த சோதனையில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.