ஜெயலலிதா-சோ சந்திப்பு வீடியோ...உரையாடலுடன் வாட்ஸ் அப்பில் கசிய விட்ட ஜெயா டிவி விஷுவல் எடிட்டர் கைது
சென்னை : துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் சோ எஸ். ராமசாமியை, முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சந்தித்த வீடியோ காட்சிகளை இருவரது உரையாடலுடன் வாட்ஸ் அப்பில் உலவ விட்ட ஜெயா டி.வி. விஷுவல் எடிட்டர் புலி என்று ஊழியர்களால் அழைக்கப்படும் சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் 15 நாட்கள் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
சோ ராமசாமி, மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 27 ஆம் தேதி மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த காட்சிகள் ஆடியோ இல்லாமலும், புகைப்படமாகவும் மட்டுமே அனைத்து ஊடகங்களிலும் வெளியாகின.
முதல்வர் நிகழ்ச்சிகளில் ஜெயா டிவி கேமராமேன்கள், செய்தியாளர், மற்றும் தமிழக அரசின் செய்திப்பிரிவு கேமராமேன்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் அரசின் செய்திப் பிரிவில் இருந்து ஜெயா டி.வி. தவிர மற்ற ஊடகங்களுக்கு அளிக்கப்படும் காட்சிகளில் ஆடியோ இருக்காது.
இந்தி நிலையில், இருவரும் சந்தித்து உரையாடிய அசல் காட்சிகள் ஆடியோவுடன் வாட்ஸ் அப்பில் பரவியது. இதனால் முதல்வர் அலுவலக வட்டாரங்கள், மற்றும் அரசு செய்திப்பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா நிகழ்ச்சிகளில் ஜெயா டி.வி. ஒளிப்பதிவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனிடையே சோ- முதல்வர் சந்திப்பை முழு ஆடியோவுடன் வெளியிட்டது யார் என்பது குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வந்தனர்.
அப்போது ஜெயா டிவி. யில் பணிபுரியும் விஷுவல் எடிட்டர் புலி எனப்படும் சக்திவேல் தான் ஜெயலலிதா- சோ சந்திப்பை முழு ஆடியோவுடன் ஆர்வக்கோளாறில் வெளியிட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து சக்திவேலை கைது செய்த போலீசார் 15 நாட்கள் காவலில் அடைத்தனர்.
வாட்ஸ் அப் விவகாரத்தில் சக்திவேலை கைது செய்தததால் ஜெயா டி.வி. ஊழியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
என்ன வருத்தம் என்றால், இனி செல்போனை அலுவலகத்திற்குள் அனுமதிக்கமாட்டார்களோ என்றும், ஊதிய உயர்வு கட்டாகுமோ என்றும் நொந்து போயுள்ளனர் ஜெயா டிவி. ஊழியர்கள்.