இலங்கை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்: மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தில் கீழ்த்தரமான கட்டுரை வெளியிட்டதற்காக அந்நாட்டு அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதங்கள் எழுதுவதை தரம் தாழ்ந்து விமர்சித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. இந்த கட்டுரை தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்திலும் இந்த கட்டுரை விவகாரம் எதிரொலித்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இது குறித்து முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், அவதூறான கட்டுரையை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க இலங்கையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகளை இழிவுபடுத்தும் வகையில் அக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியாவின் அதிருப்தியை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.