தீர்ப்பை விமர்சியுங்க..ஆனா நீதிபதி குமாரசாமி மீது அவதூறு பரப்பாதீங்க- வரிந்துகட்டும் பார் கவுன்சில்!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமராசாமியின் தீர்ப்பை யாரும் விமர்சிக்கலாம்... அதற்காக நீதிபதி குமாரசாமி மீது உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புவதை ஏற்கமுடியாது என்று தமிழகம் மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
18 ஆண்டுகாலம் நடைபெற்ற ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ100 கோடி அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்ற கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தார்.
இதனால் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். அதே நேரத்தில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் கூட்டல் கணக்குகளில் அப்பட்டமான பிழைகள் இருக்கிறது என்று பலதரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.. தொலைக்காட்சி விவாதங்கள், சமூக வலைதளங்களில் இதுதான் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த கணக்குப் பிழைகளை அடிப்படையாக வைத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுவதற்கான சாத்தியங்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பார்கவுன்சில் தற்போது நீதிபதி குமாரசாமிக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளது. இது தொடர்பாக தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி. செல்வம் கூறியதாவது:
நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்ட அதிகாரிகள் மற்றும் சட்ட மாணவர்கள் அனைவருமே நீதித்துறையின் ஒரு அங்கம். நீதித்துறையின் இந்த அங்கத்தினர் மீது உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புவதைப் பார்த்துக் கொண்டு பார் கவுன்சில் கண்ணை மூடிக் கொண்டு இருக்காது.
ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டால் அது பொது ஆவணம். அந்த தீர்ப்பை விமர்சனம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அத்தீர்ப்பில் இடம்பெற்றுள்ள விவரங்களுக்காக தீர்ப்பளித்த நபரை இலக்கு வைத்து தாக்குவதை ஏற்க முடியாது.
இப்படியே தொடர்ச்சியாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் விவாதங்கள் தொடர்ந்தால் நிச்சயமாக இதனை முடிவுக்குக் கொண்டு தமிழகம், புதுச்சேரி பார்கவுன்சில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளும். நீதிபதிகளின் கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் பொதுநலன் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்வோம். எந்த ஒரு அரசியல்வாதியும் நீதிபதிகளின் நடத்தைகளுக்கு சான்றிதழ் அளிக்க தேவையில்லை.
இவ்வாறு செல்வம் கூறினார்.
இதேபோல் அனைத்திய நீதித்துறை அமைப்பின் தேசிய தலைவர் ஆண்டனி செல்வராஜ், இப்படி நாம் எழுதுகிற தீர்ப்புகள் அரசியல் ரீதியாக விமர்சிக்கப்படுவதாக நீதிபதிகள் கருதத் தொடங்கினால் விளைவுகள் மோசமாகிவிடும். இதனால் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவை விமர்சித்த போது சென்னை உயர்நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுத்தது என்கிறார்.
இப்படியும் விஸ்வரூபமெடுக்குமோ?