அன்பார்ந்த வாக்காளர்களே.. ஆர்.கே.நகரை வலம் வந்து நன்றி சொன்னார் ஜெயலலிதா!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா இன்று தான் வெற்றி பெற்ற ஆர்.கே.நகருக்கு விஜயம் செய்து அங்கு வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி கூறும் பயணம் இன்று மாலை இடம் பெற்றது.
கடந்த ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் முதல் முறையாக ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஜெயலலிதா. இதையடுத்து மீண்டும் அதே தொகுதியில் அவர் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த முறையை விட குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஜெயித்தார் என்ற போதிலும் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட்டதால் இந்த வருத்தம் அதிமுகவினரை பெரும் கவலையில் ஆழ்த்தவில்லை.
இதையடுத்து இன்று தனது தொகுதிக்கு விஜயம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஜெயலலிதா. இன்று மாலை 5 மணியளவில் அவர் தனது நன்றி புயணத்தைத் தொடங்கினார். காசிமேடு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை,வ.உ.சி. சாலை சந்திப்பு,வைத்தியநாதன் பாலம், எண்ணூர் நெடுஞ்சாலை, மகாராணி தியேட்டர் உள்ளிட்ட 21 இடங்களில் அவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜெயலலிதாவுக்கு செல்லும் வழியெங்கும் அதிமுகவினர் திரண்டு நின்று வழக்கம் போல பிரமாதப்படுத்தினர். சாலையின் இரு மருங்கிலும் பெரும் திரளான அதிமுகவினர் திரட்டப்பட்டு காத்திருந்து வரவேற்பு அளித்தனர்.