லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையரானார் ஜெயக்கொடி
லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையராக ஜெயக்கொடியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டதன் படி லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையராக ஜெயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்பு துறை ஆணையர் பதவி ஆண்டு ஆண்டு காலமாக தலைமை செயலாளராக உள்ளவர்களிடம்தான் இருக்கும். அதன்படி அப்பதவி கிரிஜா வைத்தியநாதனிடம் இருந்தது.
இந்நிலையில் சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட டைரியில் சில அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களின் பெயர்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டனர்.இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலாளரும், லஞ்ச ஒழிப்பு ஆணையருமான கிரிஜா வைத்தியநாதனிடம் அளித்தனர்.
அதற்கு அடுத்த நாளே அந்த பதவியானது கிரிஜாவிடம் இருந்து பறிக்கப்பட்டு தமிழக உள்துறை செயலாளரும், ஜெயலலிதா, எடப்பாடியின் விசுவாசியான நிரஞ்சன் மார்டியிடம் தமிழக அரசு ஒப்படைத்தது.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையர் பதவிக்கு தனி நபரை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அப்பதவிக்கு ஜெயக்கொடியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெயக்கொடியிடம் இருந்த மின் நிதி கழகத் தலைவர் பொறுப்பை கூடுதலாக விக்ரம் கபூரிடம் ஒப்படைக்கப்பட்டது. விக்ரம் கபூர் எரிசக்தி துறை செயலாளராக உள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறைக்கான தனி ஆணையர் நியமனம் குறித்து முன்னாள் ஐ.ஏ.ஸ் அதிகாரி தேவசகாயம், ''தலைமை செயலாளர் என்ற பதவியும், லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமை அதிகாரி பதவியும் ஒரே அதிகாரியிடம் இருப்பது பெரிய பிரச்சனை. மாநிலத்தின் தலைமை செயலாளர் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளை ஒருங்கிணைத்து, வழிநடத்த வேண்டியவர். அதே அதிகாரி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தலைமை வகித்தால், பல முரண்பாடுகள் ஏற்படும்.
இதற்கு முன்பு தலைமை செயலர் பதவியில் இருந்த ராம மோகன ராவ், அவருக்கு முன்பு பணியாற்றிய ஞானதேசிகன் ஆகியோர் சென்ற அதே வழியில் கிரிஜா செல்லக்கூடாது.
பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள பல அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் இணைந்து ஊழலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பற்றி முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. இவற்றை விசாரிக்க தனி பொறுப்பில் ஓர் அதிகாரி உடனடியாக நியமிக்கப்படவேண்டும்,'' என்று தேவசகாயம் கூறியது குறிப்பிடத்தக்கது.