ஜெயலலிதாவை இதை விட யாராலும் அசிங்கப்படுத்த முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்
தேர்தலுக்கு முதல்நாளில் வீடியோ வெளியிட்டுள்ள சசிகலாவின் குடும்ப சதியை யாரும் ஏற்க மாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலை மனதில் வைத்து உள்நோக்கத்துடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்டு கீழ்த்தரமான செயலை செய்து விட்டனர் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது விசாரணை ஆணையத்தில்தான் தரவேண்டும். தன்னிச்சையாக இந்த வீடியோவை வெளியிடலாமா?
வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. இசட் பிரிவு பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை இப்படி வீடியோ எடுத்தது யார்?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டது தேர்தல் விதிமீறல். சசிகலா குடும்பத்தினரின் சதி இது. ஜெயலலிதா உயிரோடு இருந்த போதும் சசிகலா குடும்பத்தினர் அவரை நிம்மதியாக இருக்க விடவில்லை. அதே போல இப்போது நிம்மதியை குலைத்து விட்டனர்.
ஜெயலலிதாவை இதைவிட யாராலும் அசிங்கப்படுத்த முடியாது. இது உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ள வீடியோ என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் ஜெயக்குமார்.