எல்லை தாண்டினால் நெஞ்சில் குண்டைப் பாய்ச்சுவதா.. ஏற்கவே முடியாது.. ஜெயக்குமார்
உயிர் விலை மதிக்க முடியாதது. எல்லை தாண்டி விட்டார்கள் என்பதற்காக மீனவர்களை சுட்டுக்கொலை செய்வதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று தங்கச்சி மடத்தில் பேசிய தமிழக நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்கு
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கதக்கது என்று ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். எல்லை தாண்டி விட்டார்கள் என்பதற்காக மீனவர்களை சுட்டுக்கொலை செய்வதை ஒரு போதும் ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தங்கச்சி மடம் மீனவர் பிரிட்ஜோ குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மணிகண்டன் ஆறுதல் கூறினர். பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக மீனவர்களிடம் அமைச்சர்கள் உறுதி அளித்தனர்.
மீனவர் படுகொலையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடையே பேசிய ஜெயகுமார், நடுக்கடலில் இலங்கைப் படையால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கதக்கது என்றார்.
மீனவர் பிரச்சினை
மத்திய அரசிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து மீனவர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய ஜெயக்குமார், மீனவர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் அதிமுக வலியுறுத்தும் என்றார்.
கச்சத்தீவை மீட்போம்
நாடாளுமனறத்தில் தமிழக எம்.பிக்கள் தமிழக மீனவர்களின் வேதனையை தெரிவிப்பார்கள் என தெரிவித்துள்ளார். பல நூறு ஆண்டுகளாக கச்சதீவில் தமிழர்கள் மீன்பிடித்துக் கொண்டுதான் இருந்தனர். கச்சதீவை மீட்டே தீருவோம் என்றும் பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார்.
மீனவரின் உணர்வு
தங்கச்சி மடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், இரு நாட்டு மீனவர்கள் மத்தியில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளைப் பற்றி விளக்கினார். கடல் எல்லையை தாண்டும் போது படகுகள், வலைகளை சேதப்படுத்தக்கூடாது என்று பேசியதாகவும் கூறினார். மீனவர்களின் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
உயிரை பறிப்பதா?
மீனவர் மீதான தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார். உயிர் விலை மதிக்க முடியாது, எல்லை தாண்டியதற்காக துப்பாக்கியைக் கொண்டு உயிரைப்பறிப்பதா என்றார். சேதமடைந்த படகுகளுக்கு ரூ. 5லட்சம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இலங்கை வசமுள்ள 139 மீன்பிடி படகுகளை மீட்க நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.
அமைச்சராக தான் இங்கு வரவில்லை என்றும் மீனவர்களின் உணர்வு தனக்கு நன்றாக புரிகிறது என்றும் கூறினார். தமிழக மீனவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்தார்.