சசிக்கு கடல் நத்தையை கொடுத்து நடராஜன் தயவில் அமைச்சரானவர் ஜெயக்குமார்.. பிரித்து மேய்ந்த மதுசூதனன்!
சசிகலாவுக்கு கடல் நத்தையை கொடுத்து நடராஜன் தயவில் அமைச்சாரானவர் என ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் ஜெயக்குமாரை பிரித்து மேய்ந்துள்ளார்.
சென்னை: சசிகலாவுக்கு கடல் நத்தையை கொடுத்து நடராஜன் தயவில் அமைச்சாரானவர் என ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் ஜெயக்குமாரை பிரித்து மேய்ந்துள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே தான்தான் அடுத்த முதல்வர் எனக்கூறி சபாநாயகர் பதவியை இழந்தவர் என்றும் மதுசூதனன் சாடியுள்ளார்.
அதிமுக இரண்டாக பிளவு பட்டத்தில் இருந்து ஈபிஎஸ் அணியினரும் ஓபிஎஸ் அணியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இருகோஷ்டிகளுக்கும் இடையிலான வார்த்தை போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இரு அணியினருக்கும் இடையிலான சண்டையால் தமிழக அரசியல்களம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் வில்லங்கமாக பேசி வருகிறார்.
அமாவாசை இருட்டில் பெருச்சாளி
அவரது பேச்சுதான் இரு அணிகள் இணைவதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் அமாவாசை இருட்டில் பெருச்சாளி புகுந்ததாம் என்ற பழமொழியை கூறி ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனனை விமர்சித்திருந்தார்.
ஜெயக்குமாருக்கு வரலாறு தெரியாது
இந்நிலையில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த மதுசூதனன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் என்னை விமர்சித்து உள்ளார். அவருக்கு அ.தி.மு.க. கட்சியின் வரலாறு தெரியாது.
சபாநாயகர் பதவியை இழந்தவர்
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவர் சிறைக்கு சென்று விடுவார், நான் முதல்வர் ஆகி விடுவேன் என்று கூறி தன்னுடைய சபாநாயகர் பதவியை இழந்தவர் ஜெயக்குமார் என்றார்.
கடல் நத்தையை கொடுத்து..
அவர் சசிகலாவுக்கு கடல் நத்தையை கொடுத்து நடராஜனுடைய தயவில் அமைச்சர் பதவி வாங்கியவர் என்றும் மதுசூதனன் குற்றம்சாட்டினார். மேலும் நாங்கள் நாள் ஒன்றுக்கு ஒரு கருத்தும், தரம் தாழ்ந்து விமர்சித்தும் வருவதாக கூறி இருக்கிறார். அவர் ஒரு அரசியல்வாதியே கிடையாது என்றும் மதுசூதனன், ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்தார்.