எடப்பாடி தலைமையில்தான் கட்சியும், ஆட்சியும் நடக்கிறது.. டிடிவி தினகரனுக்கு ஜெயக்குமார் குட்டு
தினகரன் அரசியல் மறுபிரவேசம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அனுமானத்திற்கு எல்லாம் பதில் தரமுடியாது என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: இரு அணிகளின் இணைப்பு விரைவாக நடக்கும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கட்சியும் ஆட்சியும் ஈபிஎஸ் தலைமையில் சிறப்பாக நடைபெறுவதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் அரசியல் பிரவேசம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அனுமானங்களுக்கு பதில் தரமுடியாது என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
டிடிவி தினகரன் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கட்சி அலுவலகத்திற்கு வரப்போவதாக தகவல் வெளியானது. கட்சியையும், ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டில் தினகரன் கொண்டு வரப்போவதாக தகவல் வெளியானது. அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க தினகரன் கெடு விதித்து இருந்தார். அந்த கெடு முடிய இன்னும் சில நாட்களே உள்ளன.
இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப் போவதாக தகவல் வெளியானது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார்,
தினகரனின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்விக்கு அனுமானத்திற்கு பதில் தர முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.எங்களின் கட்சி அலுவலகத்திற்கு வழக்கம் போல சென்று வருவதாகவும் , கட்சியும் ஆட்சியும் முதல்வர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் நிதியமைச்சர் கூறினார்.
டிடிவி தினகரன் விவகாரத்திற்காக அதிமுக அம்மா அணி ஆலோசனை நடக்கவில்லை என்றார். எங்கள் கட்சி அலுவலகம் நாங்கள் வருவதில் என்ன விஷேசம் இருக்கப்போகிறது என்றும் கேட்டார்.
இரு அணிகளை இணைக்க பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது என்று கூறிய ஜெயக்குமார், 5 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி நடைபெறும் என்றும், ஆட்சியை தொடரும் வகையில் எங்கள் செயல்பாடு உள்ளது என்றும் கூறினார்.
தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்ய நாங்கள் தயார் இல்லை என்று கூறிய ஜெயக்குமார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சியும், ஆட்சியும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது என்றார்.