குற்றமற்றவர் என நிரூபியுங்கள்.. பிறர் மீது பழி போடாதீர்.. ஜார்ஜுக்கு ஜெயக்குமார் எஸ்பி அட்வைஸ்
சென்னை: நீங்கள் குற்றமற்றவர் என்றால் அதை நிரூபிக்க வேண்டும். அதை விட்டு விட்டு பிற அதிகாரிகள் மீது பழிபோட கூடாது என போலீஸ் எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.
குட்கா ஊழல் தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அச்சமயம் குட்கா ஊழலில் தொடர்புடையதாக டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் பிவி ரமணா ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் குட்கா விற்க ரூ.40 கோடி லஞ்சம் பெற்றதாக ஜார்ஜ் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் நொளம்பூரில் உள்ள தனது வீட்டில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் விழுப்புரம் எஸ்பியாக உள்ள ஜெயக்குமாருக்குத்தான் எல்லாம் தெரியும். அவர் உயரதிகாரிகளுக்கு குட்கா விசாரணை குறித்த அறிக்கை ஏதும் அளிக்கவில்லை.
பணி மூப்பில் குறைந்த மதிப்பெண்
நடந்த உண்மைகளை அவர் உயரதிகாரிகளிடம் மறைத்து விட்டார். அவருக்கு பல பொறுப்புகளை கொடுத்தேன். ஆனால் அவர் சரியாக செயல்படவில்லை. விசாரணை குறித்த தகவலை ஜெயக்குமார் மறைத்தார். இதனால் பணி மூப்பில் அவருக்கு குறைந்த மதிப்பெண் தந்தேன்.
ஜெயக்குமாரிடம் கேள்வி
குட்கா விவகாரத்தில் என்னை குறி வைத்து செயல்படுவது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. ஒரு காவல் துறை ஆணையர் மட்டுமே இந்த ஊழலை தனித்து செய்ய முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அவசியம்
அப்போது அவர் கூறுகையில் குட்கா ஊழல் தொடர்பாக தற்போதைக்கு எந்த கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை. என் நேர்மையை சென்னை மக்கள் நன்கு அறிவர். உழைப்பது என் கடமை என்றாலும் இந்த குற்றசாட்டு தொடர்பாக பதில் சொல்ல வேண்டியது இந்த நேரத்தில் அவசியமாகி உள்ளது. முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து பிற அதிகாரிகள் மீது பழிபோடக்கூடாது. பழிவாங்கும் நோக்கத்துடன் என் மீது ஜார்ஜ் குற்றம்சாட்டுகிறார். அவதூறு பரப்பி வருகிறார்.
என் மீது ஜார்ஜ் குறி
என் மீது எந்த குற்றமும் இல்லை. நான் இதை எங்கே நிரூபிக்க வேண்டுமோ அங்கு நிரூபிப்பேன்.மேல் மட்ட அரசியல் அது. மேல் மட்டத்தில் நீங்கள் அதை ஆராய்ந்து பார்த்தீர்களேயானால் அது உங்களுக்குத் தெரியும். மேல் மட்டத்தில் அவர்களைக் குறிவைக்க முடியாததால் என்னைக் குறிவைக்கிறார் என ஜெயக்குமார் தெரிவித்தார்.