ரூ350 கோடி சொத்து: ஜெ. உதவியாளர் பூங்குன்றனிடம் டெல்லியில் வருமான வரித்துறை கிடுக்குப்பிடி விசாரணை!
ரூ350 கோடி சொத்து குவிக்கப்பட்டது தொடர்பாக ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் டெல்லியில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் ரூ350 கோடி சொத்து குவிப்பு தொடர்பாக டெல்லியில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தியுள்ளனர்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவருக்கு உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். போயஸ் இல்லத்தில் அவரைத் தாண்டித்தான் ஜெயலலிதாவை சந்திக்கவே முடியும்.
அதேபோல் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பல நிறுவனங்களில் பூங்குன்றன் இயக்குநராகவும் இருந்து வருகிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் பூங்குன்றன்.
தற்போது பூங்குன்றனை டெல்லிக்கு வரவழைத்துள்ளனர் வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள். அங்கு பூங்குன்றனின் ரூ350 கோடி சொத்து குவிப்பு பற்றி துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டதாம்.
இச்சொத்துகள் அனைத்தும் பூங்குன்றனுக்கு சொந்தமானதா? ஜெயலலிதாவுக்கு உரியதா? அல்லது சசிகலா குடும்பத்துக்காக பினாமியாக எழுதி வைக்கப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அதிமுக வட்டாரங்களில் இத்தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.