நாளை பசும்பொன் செல்கிறார் ஜெ.- தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கிறார்!
2010ஆம் ஆண்டு பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி நிகழ்வுக்கு ஜெயலலிதா சென்ற போது, தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த தங்க கவசத்தை அதிமுக வழங்கும் என்று ஜெயலலிதா அப்போது அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து நாளை பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு தங்க கவசத்தை ஜெயலலிதா அணிவிக்க இருக்கிறார். இதற்காக நாளை பகல் 11.35 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்படும் அவர், பகல் 12.30 மணிக்கு மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிற்பகல் 1.30 க்கு பசும்பொன் வருகிறார்.
அங்கு தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவித்து விட்டு பிற்பகல் 2 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 2.30 க்கு மதுரை செல்கிறார். அங்கிருந்து, 2:40 க்கு தனி விமானத்தில் புறப்பட்டு 3:15 க்கு சென்னை திரும்புகிறார்.
பசும்பொன்னில் முதல்வர் வந்திறங்கும் ஹெலிகாப்டர் தளம், காரில் செல்லும் வழித்தடத்தை தமிழக கூடுதல் டி.ஜி.பி., ராஜேந்திரன் பார்வையிட்டார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கமுதியில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தென் மண்டல ஐ.ஜி., அபய்குமார் சிங், டி.ஐ.ஜி.,க்கள் அமல்ராஜ் (திருச்சி), அனந்தகுமார் சோமானி (மதுரை), அறிவுச்செல்வம் (திண்டுக்கல்), அதிரடிப்படை எஸ்.பி., கருப்பசாமி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சை எஸ்.பி.,க்கள் உடனிருந்தனர்.
முதல்வர் பாதுகாப்பிற்காக, 5000 போலீசார் பசும் பொன்னில் குவிக்கப்பட்டுள்ளனர். ஹெலிபேடு தளத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.