"வீக் என்ட்"டில் ஓடி வந்த கூட்டம்... அமைச்சர்கள், தொண்டர்களை சந்திக்க மறுத்தார் ஜெ.!
பெங்களூர்: பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை பார்க்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் பலர் முயற்சி செய்தும் சந்திக்க முடியவில்லை.
அரசு அதிகாரிகள் அவரை பார்க்க முயன்றும் ஏமாற்றமே அடைந்தனர்.
ஜெயலலிதா ஜெயிலில் அடைக்கப்பட்டதும் அவரை பார்ப்பதற்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டனர்.
குறையத் தொடங்கிய கூட்டம்:
இதனால் ஜெயில் முன்பு பெரும் கூட்டம் கூடியது. தற்போது வார நாட்களில் கூட்டம் குறையத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக கூட்டம் குறைந்து காணப்பட்டது.
கூட்டமாக கூடிய அமைச்சர்கள்:
ஆனால் விடுமுறை நாளான நேற்று ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள ஜெயில் முன்பு ஏராளமான கூட்டம் கூடியது. அமைச்சர்கள் பா.வளர்மதி, பழனியப்பன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஜெயில் முன்பு கூடி இருந்தனர்.
உத்தரவின்றி உள்ளே வராதே:
ஜெயலலிதாவை பார்க்க செல்பவர்களை உள்ளே அனுப்ப ஜெயில் அதிகாரிகள் தயாராகவே உள்ளனர். ஆனால் என் அனுமதியின்றி என்னை பார்க்க யாரையும் அனுப்ப வேண்டாம் என்று ஜெயில் அதிகாரிகளிடம் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
அனுமதிக்காத அதிகாரிகள்:
அவரை பார்க்க செல்பவர்கள் ஜெயில் அதிகாரிகளிடம் துண்டு சீட்டை கொடுத்து அனுப்புகிறார்கள். ஆனால் யாரையும் பார்க்க விரும்பவில்லை என்று ஜெயலலிதா மறுத்து விட்டார். எனவே அவரை பார்க்க யாரையும் ஜெயிலுக்குள் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
500க்கும் மேற்பட்ட தொண்டர்கள்:
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பொதுவாகவே ஜெயிலுக்குள் கைதிகளை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. ஆனாலும் 500க்கும் மேற்பட்டோர் ஜெயில் வாசலில் கூடி இருந்தனர்.