ஸ்ரீரங்கம் கட்டட விபத்து: பலியான 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: ஜெ. அறிவிப்பு
சென்னை: திருச்சி ஸ்ரீரங்கத்தில் கட்டடம் கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மேல உத்திர வீதியில் கட்டடப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டினருகே 23.12.2015 அன்று மற்றொரு வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
அதில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் கோபி, பெருமாள் என்பவரின் மகன் லட்சுமணன், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் ரமேஷ், தென்னூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் ரங்கநாதன் ஆகியோர் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். ஆறு நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.
இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், திருச்சிராப்பள்ளி மாவட்ட நிருவாகத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.