காற்று கண்காணிப்பு நிலையங்கள்… வன பாதுகாப்புகுழுக்கள் : சட்டசபையில் ஜெ.110 அறிவிப்பு
சென்னை: காற்றின் தன்மையை தொடர்ச்சியாக உடனுக்குடன் கண்காணிக்க மாநிலம் முழுவதும் உள்ள நகரம் மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளில் 25 இடங்களில் தொடர் காற்று கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் மனித-வன உயிரின மோதல்களை தடுக்க ஐந்து அதிவிரைவு குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று வாசித்த அறிக்கை:
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மாமிச உண்ணிகள், யானைகள், காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகள் மற்றும் கரடிகளால் மனித-வன உயிரின மோதல்கள் தொடர்பான நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
நவீன கருவிகள்
அத்தகைய மோதல் சூழ்நிலைகளில் அதிவிரைவான செயல்பாட்டுக்கென ஒரு குழுவினை ஏற்படுத்துவது அவசியமாகிறது. அதி நவீன கருவிகளுடன் சிறப்புப் பயிற்சி பெற்ற பணியாளர்களைக் கொண்டதாக அமையப் பெறும் இக்குழு, விரைவாகச் செயல்படுவதுடன், சிக்கலான சூழ்நிலைகளையும் மேலாண்மை செய்யும்.
ஐந்து குழுக்கள்
புலிகள் காப்பகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனித-வன உயிரின மோதல்களில் ஈடுபடும் மாமிச உண்ணிகளை எதிர்கொள்வதற்கு அதிவிரைவு குழுக்கள் உருவாக்குவதை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஊட்டி, கூடலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் 2015 - 2016ஆம் ஆண்டில் 8 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து அதிவிரைவு குழுக்கள் ஏற்படுத்தப்படும்.
சந்தன மரம் வளர்க்கும் திட்டம்
ஜவ்வாது மலை, சேர்வராயன் மலை, கொல்லி மலை, பச்சை மலை மற்சிம் சித்தேரி மலைப் பகுதிகள் சந்தன மரங்கள் இயற்கையாக வளரும் தாயகமாக உள்ளன. வேலூர், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் சந்தன மரங்கள் அதிகம் வளரும் இடங்களுக்கு அருகில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் காப்புக் காடுகளில் சந்தன மரம் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
வேலை வாய்ப்பு
இந்தத் திட்டம் பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பளித்து கூடுதல் வாழ்வாதார பாதுகாப்பை உருவாக்குவதுடன், சந்தன மர வளத்தைப் பெருக்கி அரசுக்கு கணிசமான வருவாயை ஈட்டித் தரும். இத்திட்டம் நாளடைவில் வேலை வாய்ப்பிற்காக பழங்குடியினர் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்தலைத் தடுக்கும். இத்திட்டத்திற்கு, ஆண்டொன்றிற்கு தலா 10 கோடி ரூபாய் வீதம் 10 ஆண்டுகளுக்கு மொத்தம் 100 கோடி ரூபாய் செலவாகும். நடப்பாண்டில் இத்திட்டத்திற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
காற்று கண்காணிப்பு நிலையங்கள்
இந்தியாவில் மிகவும் நகரமயமானதும், தொழிற்சாலைகள் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணியாக வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகை உள்ளது. எனவே காற்றின் தன்மையை நகர மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் கண்காணிப்பது மற்றும் தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகிறது.
தொழிற்சாலைப் பகுதிகள்
எனவே காற்றின் தன்மையை தொடர்ச்சியாக உடனுக்குடன் கண்காணிக்க மாநிலம் முழுவதும் உள்ள நகரம் மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளில் 25 இடங்களில் தொடர் காற்று கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்படும். இதன் மூலம் காற்றின் தன்மை குறித்த தகவல்களை முழுமையாக சேகரிக்க இயலும். தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படும் இத்தகைய தொடர் காற்று கண்காணிப்பு அமைப்பானது இந்தியாவிலேயே முதன்மையானதும் மற்றும் தனிச் சிறப்பும் வாய்ந்ததாகும்" என்று கூறப்பட்டுள்ளது.