கூட்டல் பிழையை திருத்துங்கள்.. ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் அன்பழகன் தரப்பு மனு
டெல்லி: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் திமுக பொதுசெயலாளர் க.அன்பழகன் மனு தாக்கல் செய்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் விசாரிக்க வேண்டிய அம்சங்கள் என்ன? என்பது குறித்து அன்பழகன் மனு தாக்கல் செய்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு வழக்கு தொடுத்துள்ளது. திமுகவின் க.அன்பழகன் தரப்பும் மேல்முறையீடு செய்துள்ளது.
பிப்ரவரி 2ம் தேதி முதல் இதில் இறுதி வாதம் ஆரம்பிக்க உள்ள நிலையில், வழக்கில் விசாரிக்க வேண்டிய அம்சங்களை தாக்கல் செய்ய கர்நாடகா, அன்பழகன் மற்றும் ஜெயலலிதா ஆகிய மூன்று தரப்புக்கும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து முதலில் கர்நாடக அரசு தரப்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் ஜெயலலிதா தரப்பு பதில் தாக்கல் செய்தது.
இன்று, அன்பழகன் தரப்பு தங்கள் பதிலை தாக்கல் செய்துள்ளனர். அன்பழகன் சார்பில், கம்பெனி விவகாரங்களுக்கான 16 அம்சங்கள் கொண்ட மனுவும், ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலை எதிர்த்த வழக்கில் 25 அம்சங்கள் கொண்ட மனுவும் தனித் தனியாக தாக்கல் செய்யப்பட்டன.
சொத்து குவிப்பு வழக்கில் விசாரிக்க வேண்டிய அம்சங்கள் என்ன? என்பது குறித்து அன்பழகன் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி தீர்ப்பில், பிழை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். தீர்ப்பில் பிழை உள்ளதால் வழக்கை தெளிவாக விசாரிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் உள்ள கணக்கீட்டு குளறுபடிகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கர்நாடக அரசையும் மனுதாரராக சேர்க்க வேண்டும் என கோரப்பட்டிருந்தையும், ஆனால் கர்நாடக அரசை சேர்க்காமல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகவும் மனுவில் அன்பழகன் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் பெயரில் உள்ள சொத்துக்களை மட்டுமே சேர்த்து மற்றவர்களின் பெயரில் உள்ள சொத்துகளை சேர்க்காமல் கர்நாடக உயர் நீதிமன்றம் கவனிக்காமல் தீர்ப்பளித்துள்ளது எனவும், எனவே, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்று கொள்ளத்தக்கது அல்ல என்றும் தனது மனுவில் அன்பழகன் குறிப்பிடப்பட்டுள்ளர்.