ஜெயிலில் இருப்பதை விட முதல்வர் வேலை கஷ்டமாச்சே.. ஜெயலலிதா குறித்து ஞானி 'நறுக்'
சென்னை: 20 வருட சிறை தண்டனைக்கு பிறகு நளினிக்கு பரோல் கூட மறுக்கப்பட்ட அநீதியை பற்றி முணுமுணுக்காதவர்கள்தான் இப்போது ஜெயலலிதாவுக்கு அநீதி என்று ஆவேசப்படுகிறார்கள் என்று கூறியுள்ள அரசியல் விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான ஞானி, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஞானி கூறியிருப்பதாவது: ஊழல் ஒரு சமூக விரோத நடவடிக்கை, ஒரு மனித உரிமைக்கெதிரான குற்றச்செயல் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உச்சநீதிமன்றக் கருத்தைக் காரணம் காட்டி ஜெயலலிதாவுக்கும் மூவருக்கும் ஜாமீன் மறுத்ததை வரவேற்கிறேன்.
மேல்முறையீடுகளை விரைந்து விசாரியுங்கள்
இது எல்லா ஊழல் அரசியல்வாதிகளுக்கும் வரும் நாட்களில் பின்பற்றப்படவேண்டும். அதே சமயம் இறுதியில் நிரபராதி என்று ஒருவர் தீர்ப்பாகும் நிலை ஏற்பட்டால், தேவையற்ற சிறைவாசத்தை அவர் ஜாமீன் மறுப்பால் அனுபவித்துவிடக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு,மேல் முறையீட்டு மனுக்களை வருடக்கணக்கில் இழுத்தடிக்காமல் ஒரு மாதத்துக்குள் உச்ச நீதிமன்றம் வரை விசாரித்து முடிக்கவேண்டும்.
ஜாமீன் மறுக்கப்பட வேண்டும்
இந்த அணுகுமுறைதான் நம் நாட்டில் இனி நீதி விரைவாகவும் பாரபட்சமின்றியும் நடக்க உதவும். இப்போதும் கூட ஓரிரு தினங்களில் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவும் இதர மூவரும் ஜாமீன் பெற்றுவிடும் வாய்ப்பு உள்ளது. அதை விட அங்கேயும் ஜாமீன் மறுக்கப்பட்டு, மொத்த மேல் முறையீட்டு மனுவும் ஒரு மாதத்துக்குள் விசாரித்து தீர்க்கப்படுவதையே நான் விரும்புகிறேன்.
ஜெயிலில் இருப்பதை விட முதல்வர் வேலை கஷ்டமாச்சே..
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் இதய நோய எல்லாம் இருப்பவரால் எந்த வேலையும் செய்யாமல் ஓய்வு எடுத்துக் கொண்டு புத்தகம் படித்துக் கொண்டு தனி அறையில் சிறையில் இருப்பது கடினம், எனவே பெயில் வேண்டும் என்றால், எப்படி இன்னும் கடினமான முதலமைச்சர் வேலையை அன்றாடம் செய்ய முடிந்தது?
நளினிக்கு ஒரு நீதியா?
ஜாமீன் மறுப்பு அநீதி என்று கூறப்படுவதை நான் ஏற்கவில்லை. 20 வருட கால சிறைவாச நன்னடத்தைக்குப் பின்னரும் வெறும் பரோலே நளினி முதலானோருக்கு மறுக்கப்பட்ட அநீதியை பற்றி முணுமுணுக்காதவர்கள்தான் இப்போது அநீதி என்று ஆவேசப்படுகிறார்கள்.
எல்லோரும் ஆதரியுங்கள்
இன்றைக்கு தமிழ்ச் சமூகத்தை முழுக் குட்டிசுவராக்கி உள்ளுக்குள்ளேயே அழுகவைத்துக் கொண்டிருக்கும் இரண்டு விஷயங்கள் மதுவும் ஊழலும்தான். இரண்டுக்கும் எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை இந்த சமூகத்தின் மீது அன்பு உள்ள எல்லாரும் மனம் உவந்து ஆதரிக்கவேண்டும்.
மீடியாவை குற்றம் சொல்லாதீர்கள்
ஜாமீன் தரப்பட்டுவிட்டது என்று முதலில் வெளியான செய்திக்கு பொறுப்பு மீடியா அல்ல. பலரும் தவறாக மீடியாக்களை விமர்சித்து வருகிறார்கள். அ.தி.மு.க வழக்கறிஞர் கோர்ட்டுக்கு வெளியே காத்திருக்கும் எல்லா மீடியா நிருபர்களிடமும் வந்து நீதிபதி நிபந்தனை ஜாமீன் அளிப்பதில் தங்களுக்கு ஆட்சேபமில்லை என்று பிராசிக்யூஷன் தெரிவித்துவிட்டதாக கூறினர்.
அதிமுக வக்கீல்கள் செய்த வேலை
நீதிபதி இப்போது என்னென்ன நிபந்தனை என்று சொல்லிக் கொண்டிருப்பதாகவும் அந்த விவரம் பின்னர்தான் தெரியவரும் என்றும் அதிமுக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆனால் 'புரட்சித்தலைவி அம்மா'வுக்கு ஜாமீன் தரப்படுவிட்டதாகவும் அறிவித்தார். இதுவே முதலில் பல ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பாயிற்று. இதுதான் ஆரம்பத் தவறு. இவ்வாறு ஞானி தெரிவித்துள்ளார்.
18 வருடம் சுதந்திரமாக இருந்தாரே..
மற்றொரு பேட்டியொன்றில், குற்றம் சுமத்தப்பட்ட பிறகும், சிறைக்கு செல்லாமல் 18 வருடம் சுதந்திரமாக ஜெயலலிதாவால் இருந்திருக்க முடிகிறதே. இதுபோல நீதி வழங்குவதில் தாமதம் கூடாது என்றும் கூறியுள்ளார்.