அப்பல்லோவில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு ஜெ. மாற்றம்!!!
அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா ஐசியுவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 58 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா தற்போது சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னதாகா ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் அவரது தோழி சசிகலா நடராஜன் நேற்று வழிபாடு நடத்தினார்..
அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதி முதல் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டன் மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.
அப்பல்லோ அறிக்கைகள்
இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதுவரை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அறிக்கைகள் மட்டுமே வெளியாகி வந்தன.
பிரதாப் ரெட்டி
பின்னர் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, செய்தியாளர்களைச் சந்தித்து முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தேறிவிட்டது; அவர் விரும்பும்போது வீடு திரும்பலாம் என தொடர்ந்து கூறிவந்தார். சென்னையில் நேற்றும் செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் ரெட்டி, இதையே சுட்டிக்காட்டியிருந்தார்.
சசிகலா வழிபாடு
திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஆலயத்துக்கு வந்த சசிகலா நடராஜன், உறவினர்களுடன் சென்று வழிபாடு நடத்திவிட்டு அப்பல்லோ திரும்பினாராம். இதையடுத்து இன்று மாலை அப்பல்லோவில் இருந்து முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்பக் கூடும் என முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர் அவர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்படக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
7 வார ஓய்வு
சிறப்பு வார்டுக்கு மாறினாலும் ஜெயலலிதா சுமார் 7 வாரங்கள் முழுமையாக ஓய்வெடுத்த பின்னரே வீடு திரும்புவார் என்றும் அரசு பணிகளை முழு அளவில் மேற்கொள்வார் என்று அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.