ரங்கசாமி செயலற்ற முதல்வராகிவிட்டார்… ஜெயலலிதா குற்றச்சாட்டு
புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. மத்திய அரசு செய்த தவறுகளையும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு தட்டிக் கேட்கவில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஓமலிங்கத்தை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
''மத்தியில் தற்போது ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. எனவே, மக்கள் விரோத ஆட்சியை தூக்கியெறிந்து மக்களாட்சி மலரச் செய்ய வேண்டும். தமிழர்களின் நலன் காக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும்.
பாதுகாப்பு துறையை பாதுகாப்பற்ற துறையாக மாற்றிவிட்டது மத்திய அரசு. கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ரங்கசாமிக்கு வாக்களிக்கும்படி உங்களை கேட்டுக்கொண்டேன். அந்த தேர்தலில் ரங்கசாமிக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த என்.ஆர்.காங்கிரஸ் அ.தி.மு.க.வை ஓரங்கட்டிவிட்டு, சுயேட்டையாக நின்று வெற்றி பெற்றவரின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இருப்பினும் ரங்கசாமி செயல்படாத முதல்வராகவே இருந்து வருகிறார்.
புதுச்சேரியில் அமைந்துள்ள ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் அரசால் புதுவையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் புதுச்சேரியில் அ.தி.மு.க. அரசு அமைந்திருந்தால் மக்கள் நலத்திட்டங்கள் நடந்திருக்கும்.
என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. மத்திய அரசு செய்த தவறுகளையும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு தட்டிக் கேட்கவில்லை.
மீனவர் பிரச்னை, அன்னிய முதலீடு உள்ளிட்ட உள்ளிட்ட பிரச்னைகளில் என்.ஆர்.காங்கிரஸ் மௌனம் சாதிக்கிறது.
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர மத்திய அமைச்சர் நாராயணசாமி என்ன செய்தார்?
தொழிற்சாலை, விமான நிலைய விரிவாக்கத்துக்கு நாராயணசாமி நடவடிக்கை எடுக்கவில்லை" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.