ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு : தமிழிசையின் ஜெர்மனி பயணம் ரத்து - ஸ்டாலின் நிகழ்ச்சியும் ரத்து!
முதல்வர் ஜெயலலிதா மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னையில் தங்கியுள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு நுரையீரல் தொற்று, ரத்தத்தில் தொற்று என்று கூறப்பட்டது. தொடர்ந்து அவருக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சார்டு ஜான் பீலே மற்றும் சிங்கப்பூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதல்வர் குணமடைந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், ஞாயிறன்று மாலை முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்கானித்தனர்.
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது. இதனையடுத்து தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார். இந்நிலையில், தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் நடைபெறும் திருமணத்தில் பங்கேற்க செல்ல இருந்த நிலையில் அவரது பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார்.
அதேபோல பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஜெர்மனி செல்ல இருந்தார். இதற்காக அவர் நேற்று டெல்லி கிளம்பினார். மாலையில் முதல்வரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படவே, உடனடியாக தனது பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார். ஜெர்மனியில் நடைபெறும் ஆளும் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள பாஜக தமிழிசை தலைமையில் 5 பேர் குழு இன்று செல்ல இருந்த நிலையில் பயணத்தை ரத்து செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்.
இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ராஜ்யசபா எம்பி இல.கணேசன் ஆகியோர் இன்று அப்பல்லோவிற்கு வருகை தந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இல. கணேசன், ஜெயலலிதா குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார். பிரதமர் உட்பட பாஜகவினர் அனைவரும் ஜெயலலிதா உடல் நலம் பெற விரும்புவதாக தெரிவித்தார். ஜெயலலிதா உடல்நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டறிந்தார் என்றும் கூறினார்.