For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மது விலக்கு அறிவிப்பு: ஏய்த்து பிழைக்கும் தொழிலே சரிதானா?, ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் வருகிறது என்றதும், மதுவிலக்குக் கொள்கையை மத்திய அரசு இந்தியா முழுவதும் கொண்டு வராத நிலையிலேயே, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கினைப் படிப்படியாகக் கொண்டு வருவோம் என்று ஜெயலலிதா சொல்வது ஊரை ஏமாற்றுவதற்காகத் தானே? இப்படிச் சொல்லி யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம்; தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது! தேர்தல் பிரச்சாரத்தில் திசை திருப்பும் திரிபு வாதத்தைக் கையிலெடுத்திருக்கிறார்; இறுதியில் ஏமாறப் போவது ஜெயலலிதா தான், என்று கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி இன்று 'உடன்பிறப்புகளுக்கு' எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தை 9-4-2016 அன்று துவக்கியிருக்கிறார். மிகப் பெரிய மேடை அமைத்து, அதிலே அம்மையார் ஒருவரை மட்டும் உயரே தனிப் பீடத்தில் அமர வைத்து, காவலுக்கு மூன்று நான்கு காவலர்கள் துப்பாக்கியோடு நிற்க, வேட்பாளர்கள் எல்லாம் மேடைக்கு கீழே பதிவிசாய் கும்பிட்ட கைகளோடு நின்று கொண்டிருக்க, முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கே உரிய "வசை புராணத்தை"ப் பாடி முடித்திருக்கிறார்.

எதிர்க் கட்சிகளின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பதில் கூறாவிட்டாலும், அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஜனநாயகத்தை மதித்து நாம் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள் அல்லது பதிலளிக்கத் தெரிந்தவர்கள்.

Jayalalitha cheat the people by making false announcement on liqour ban, says Karunanidhi

ஆட்சியிலே இருந்த காலத்தில் மதுவிலக்குப் பிரச்சினைக்காக சசிபெருமாள் போன்ற சமூகக் காவலர்கள் உயிர் துறந்த போதும், மதுவிலக்கைக் கொண்டு வருவோம் என்று அறிவிக்க முன் வராத ஜெயலலிதா, மதுவிலக்குப் பிரச்சாரப் பாடல் பாடியதற்காகக் கோவன் போன்றோர் மீது தேச விரோத வழக்கு தொடுத்த ஜெயலலிதா, மீண்டும் ஆட்சிக்கு வந்தால், படிப்படியாக மது விலக்குக் கொண்டு வரப் போவதாக அறிவித்திருக்கிறார். அதை நம்புவதற்குத் தமிழ் நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்களா என்பது வேறு பிரச்சினை.

முதலமைச்சர் ஜெயலலிதா தனது பேச்சில் மதுவிலக்கைப் பற்றி நானோ, தி.மு.க.வோ பேசக் கூடாது என்றும், தமிழகத்திலே மதுவிலக்கை ரத்து செய்தது தி.மு.கழக ஆட்சியிலே தான் என்றும் இத்தனை ஆண்டுக் காலமாக அரைத்த மாவையே திரும்பவும் அரைத்திருக்கிறார்.

அவரது இந்தக் குற்றச்சாட்டுக்கு நாமும் பல முறை பதில் கூறி விட்டோம். ஆனாலும் அவருக்குப் பேசுவதற்கோ, குறை சொல்வதற்கோ வேறு எதுவும் கிடைக்காததால், அதையே திரும்பவும் பேசியிருக்கிறார். தூங்குபவர் களை எழுப்பலாம், துhங்குவது போல பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியுமா? தி.மு. கழக ஆட்சியில் மது விலக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்றாலும், அப்போதே நான் கூறியிருக்கிறேன்; இதனை திராவிட முன்னேற்றக் கழகம் முழு மனதோடு கொண்டு வரவில்லை என்றும், அப்போதுள்ள தமிழகத்தின் நிதி நிலைமை தான் அதற்குக் காரணம் என்றும் பல முறை விளக்கியிருக்கிறேன்.

மதுவிலக்கை ஒத்தி வைத்து தமிழகச் சட்டப் பேரவையில் நான் உரை நிகழ்த்தும்போது கூட கூறியது என்ன?
"புனித நோக்கத்துடன் இந்தியப் புவி முழுவதும் எந்தக் கொள்கை விரிவாக்கப்பட வேண்டுமென்று காந்தியடிகள் கூறினாரோ, அந்தக் கொள்கை அவர் ஏந்திய கொடி நிழலில் அணி வகுத்து நின்ற அவர்தம் தானைத் தளபதிகளாம் மாநில முதல்வர்களாலேயே பின்பற்ற முடியாமல் போனது மட்டுமல்ல, மத்திய அரசினை நடாத்தும் மகாத்மாவின் வாரிசுகளாலும் புறக்கணிக்கப்பட்டது வேதனை தரும் செய்தியாகும்.

கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள் கொளுத்தப் படாத கற்பூரமாகத் தமிழ்நாடு எத்தனை நாளைக்குத் தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்" என்று சட்டப் பேரவையில் பேசினேன் என்பதை ஜெயலலிதா மறைத்து விட முடியாது. மனச்சாட்சி இடம் கொடுக்காத நிலையில் தான் மதுவிலக்குச் சட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தேனே தவிர வேறல்ல. முதலமைச்சர் ஜெயலலிதா இதையெல்லாம் வசதியாக தனது பேச்சிலே மறைத்து விட்டார்; தேர்தல் என்றதும் பொய்யுரை ஆற்றப் புறப்பட்டிருக்கிறார்!

29-6-1971 அன்று நிதி நிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்குப் பதிலளித்து நான் உரையாற்றும்போது "மாண்புமிகு உறுப்பினர்களின் - தோழமைக் கட்சி நண்பர்களின் உணர்ச்சியை மதிக்கிறேன். பாராட்டுகிறேன். அவர்களில் சிலபேர் என்னைக் கெஞ்சிக் கூடக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மன்றாடிக் கேட்பதாகக் கூடச் சொன்னார்கள். அவர்களை எல்லாம் விட நான் வயதிலே சிறியவன். அப்படி மன்றாடிக் கேட்டதை, கெஞ்சிக் கேட்டதைத் தயவு செய்து திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். இதைத் தவிர வேறு வழி இல்லை என்ற காரணத்தால் தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். அதுவும் ஒத்தி வைத்திருக்கிறோம் என்றுதான் கூறி யிருக்கிறோம்" என்று தான் மிகுந்த பணிவன்போடு விளக்கினேன்.

ஜெயலலிதா தனது பேச்சில், மூதறிஞர் ராஜாஜி அவர்கள் கொட்டும் மழையில் என்னை இல்லத்திலே சந்தித்து, காலில் விழுந்து இறைஞ்சும் வகையில் கெஞ்சினார் என்றெல்லாம் மிகைப்படுத்தி, கற்பனைக் கதை அளந்திருக்கிறார். ராஜாஜி மதுவிலக்கு பற்றி என்னைச் சந்தித்துப் பேசிய போது மழையே பெய்யவில்லை. காலில் விழுந்தும் கேட்கவில்லை. என்னைச் சந்தித்துக் கேட்டது உண்மை. ஆனால் அரசின் நிதி நிலை பற்றி நான் அவரிடம் விளக்கிக் கூறினேன் என்பது தான் உண்மை.

1971இல் தி.மு. கழக அரசு; கள், சாராயக் கடைகளைத் திறந்தது என்றாலும், 1974இல் - தி.மு.கழக ஆட்சிக் காலத்திலேயே, மீண்டும் மதுக்கடைகளை மூடி, மது விலக்கை நடைமுறைப்படுத்தியது. திறந்ததை மறக்காமல் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், மூடியதை மட்டும் வசதியாக மூடி மறைப்பது சரி தானா என்பதை நடுநிலையாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். வரலாற்றைச் சொல்லும் போது, நடந்ததை நடந்தபடி சொல்லவேண்டும்; சொந்தக் காரணங்களுக்காக திரிபு வாதத்தைத் திணிக்கக் கூடாது.

ஒத்தி வைப்பது என்பது மீண்டும் நடைமுறைக்கு வரும் என்ற அடிப்படையில் தானே? தி.மு. கழக ஆட்சிக் காலத்திலேயே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் சட்ட முன் வடிவு தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக 22-8-1974 அன்று நிறைவேற்றப்பட்டதா இல்லையா? முதலமைச்சர் ஜெயலலிதா அவரது பேச்சில் இதை அப்படியே மறைத்து விட்டாரே, ஏன்? வழக்கம்போல இந்தப் பிரச்சினையிலும் தன் நெஞ்சறியப் பொய் பேசியிருக்கிறாரே?

அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியிலே என்ன செய்தார்கள்? தி.மு.கழக ஆட்சியிலே கொண்டு வந்த மதுவிலக்கு ரத்து என்பது, தி.மு. கழக ஆட்சியிலேயே மீண்டும் திரும்பப் பெறப்பட்டு, மதுவிலக்கு நடைமுறைக்கு வந்து விட்டது என்பதுதான் உண்மை, உண்மை. இதை உண்மைக்குப் புறம்பானது என்று யாராவது சொல்ல முடியுமா?

ஆனால், 1981இல் அ.தி.மு.க. ஆட்சியில் மீண்டும் கள், சாராய விற்பனைக்காக, மதுவிலக்கை ரத்து செய்தார்களா இல்லையா? அப்படி ரத்து செய்யப்படவில்லை என்று எவராவது எடுத்துரைத்திட முடியுமா?

ஜெயலலிதா குறுகிய காலத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு காரணமாகப் பதவி விலகி, ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, அந்நிய மது வகைகள், 100 மில்லி 15 ரூபாய் என்கிற மலிவு விலையில் 2002 ஜனவரி முதல் வாரத்திலிருந்து விற்பனைக்கு வரும் என்று அறிவித்தாரா இல்லையா?

2003ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசே மதுவிற்பனைக்காக "டாஸ்மாக்" நிறுவனத்தைத் தொடங்கி, அரசே ஊருக்கு ஊர் மது விற்பனைக் கடைகளைத் திறந்ததா இல்லையா? "டாஸ்மாக்" கடைகள் ஊருக்கு ஊர் திறக்கப்பட்டதே ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தானே? இப்படி நடந்ததா இல்லையா?

திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு நான் அறிவித்த பிறகு, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், முன்னணியினரும், சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும், மகளிர் அமைப்புகளும் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் என்னைத் தொடர்பு கொண்டு அந்த அறிவிப்பை வரவேற்றதோடு, நல்ல முடிவு என்றும் கூறினார்கள். என்னுடைய அறிவிப்பு அனைத்துத் தரப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல!

22-12-2008 அன்று பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களும், மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் என்னைச் சந்தித்து தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்திய போது, அவர்கள் கூறியதில் ஒத்த கருத்துடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு, 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் முழுவதிலும் 1300 மதுக் கூடங்களை (பார்) மூடியுள்ளது என்பதையும், அதே போல் 128 சில்லறை மது விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பதையும் நினைவூட்டினேன்.

மேலும், தொடர்ந்து படிப்படியாக முழு மது விலக்கினை எய்திடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அது வரையில் ஆலயங்கள், பள்ளிக் கூடங்கள், கல்லுhரிகள், மசூதிகள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களுக்கு அருகில் மதுக்கடைகள் அமையாமல் எச்சரிக்கையுடன் நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவெடுத்துள்ளது என்றும், மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் ஒரு மணி நேரத்தைக் குறைத்து - மதுக்கடைகள் இயங்கும் என்றும் அறிவித்ததோடு, அதற்கிணங்க ஆணையும் பிறப்பிக்கப்பட்டதா இல்லையா?

மதுவிலக்குக் கொள்கையைப் பொறுத்தவரையில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் முதன் முதலாக மதுவிலக்கு ஒத்தி வைக்கப்பட்டதைப் போல ஜெயலலிதா நேற்றைய தினம் பேசியிருக்கிறார். இதுவும் உண்மையல்ல; இதுவும் ஜெய லலிதா செய்யும் வரலாற்றுத் திரிபுதான்!

1937இல் ராஜாஜி தலைமையில் சென்னை மாகாண அரசு அமைந்ததும், அதுவரை சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இல்லாத மதுவிலக்கை அமல் படுத்தினார். ஆனால் அதுவும் 1939இல் முடிவுக்கு வந்தது. அந்த 1937ஆம் ஆண்டிலே கூட, ராஜாஜி முதலமைச்சராக இருந்த போதே கூட, சென்னை மாகாணத்தில் இருந்த 25 மாவட்டங்களில், நான்கு மாவட்டங்களில் மட்டும் தான், அதாவது சேலம், சித்துhர், கடப்பா, வட ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் தான் மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது.

மற்ற மாவட்டங்களில் 1937ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த நிலைமை தான் இருந்து வந்தது. 1948இல் ஓமந்துhரார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகுதான் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார். இது தவிர மற்ற காலங்களில் அதாவது 1937க்கு முன்பும் சரி, 1939க்குப் பின்பு 1948ஆம் ஆண்டு வரையிலும் சரி, தமிழகத்திலே மதுவிலக்கு நடைமுறையிலே இல்லை என்பதை சற்று யோசித்துப் பார்த்தால், தமிழகத்திலே தி.மு. கழக ஆட்சியில் தான் முதன் முதலாக மதுவைப் புகுத்தி விட்டார்கள் என்ற ஜெயலலிதாவின் வாதம், எந்த அளவுக்கு விதண்டாவாதம் என்பதையும், தி.மு. கழகத்தையும் என்னையும் மட்டும் பொறுப்பாக்குவது ஜெயலலிதாவின் எப்படிப்பட்ட தரமில்லாத அரசியல் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

இன்னும் சொல்லப் போனால், மதுவிலக்கு குறித்து 13-9-1969இல் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையின் இறுதியில், "மதுவிலக்குக் கொள்கையில் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள எந்தத் தனி மனிதனுக்கோ, எந்தக் கட்சிக்கோ உள்ள அக்கறையை விட, அந்தக் கொள்கை மக்களுக்குத் தேவையானது என்பதில், தி.மு. கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞருக்கு அதிக அக்கறையும், அதிகப் பிடிப்பும் உண்டு என்பதை மற்றையோரை விட அழுத்தமாக என்னால் துணிந்து கூற முடியும்" என்று தெரிவித்ததையும், அதற்குப் பின் அவரே "ஆனந்த விகடன்" பத்திரிகையிலே "நான் ஏன் பிறந்தேன்" என்ற தலைப்பிலே எழுதிய நீண்ட தொடர் கட்டுரையிலே விரிவாக எழுதியிருக்கிறார் என்பதையும் ஜெயலலிதா மறந்து விட்டாரா? அல்லது மறைத்து விட்டாரா?

காந்தியவாதி சசிபெருமாள்! அறுபது வயதைக் கூட எட்ட வில்லை. குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை மூட வேண்டு மென்பதற்காகத் தான் போராட்டம். அந்த ஒரு கடையை மூடுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தால் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகமெங்கும் போராட்டமும் பெருகியிருக்காது. ஆனால் இந்த ஆட்சியிலே எதைக் கவனித்தார்கள்; இதைக் கவனிப்பதற்கு? "செல்போன் டவரில்" எத்தனை மணி நேரம் அவரால் இருக்க முடியும்? சம்பந்தப்பட்டவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் அங்கே வந்து பிரச்சினையைப் பேசி முடிவு கண்டிருந்தால், மதுவிலக்குக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருந்த சசிபெருமாள் அகால மரணம் அடைந்திருப்பாரா?

அவரது மரணத்துக்குப் பிறகு அவை தீவிரமடைந்தன. கல்லுhரி மாணவர்கள், குடும்பத்தலைவிகள், பொது நல அமைப்புகள் என தமிழ்நாடு எங்கும் போராட்டங்கள் தொடருகின்றன. அத்தனை அரசியல் கட்சிகளும் தங்கள் பங்குக்கு களத்தில் நிற்கின்றன. போராட்டங்கள் தீவிரமடைய தொடங்க, ஆகஸ்ட் 15ஆம் தேதி மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என்ற செய்திகள் அரசுத் தரப்பில் இருந்து ஊடகங்களில் கசியவிடப்பட்டன. போராட்டங்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதல் அமைச்சர், டாஸ்மாக் கடைகளில் வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டார்.

தான் எல்லாவற்றிலும் எப்போதும் ஏமாற்று வித்தையையே தொடர்ந்து கையாண்டு வருவதைப் போல, தேர்தலில் மக்களை ஏமாற்றுகின்ற நோக்கத்தோடு, ஏமாற்றி வாக்கு அறுவடை செய்து விடலாம் என்ற நப்பாசையோடும், கபட எண்ணத்தோடும், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கை படிப்படியாகக் கொண்டு வரப் போவதாக அறிவித்திருக்கிறார். ஆட்சியிலே இருந்த ஐந்தாண்டுகளில் செய்திட மனம் வராததை, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செய்யப் போவதாக ஊரை ஏமாற்றச் செய்யப் போகிறார்களாம்! "ஏய்த்துப் பிழைக்கும் தொழிலே சரிதானா?" என்று எம்.ஜி.ஆர். பாடிய பாடல் தான் மக்களின் நினைவுக்கு வரும்!

இதே ஆண்டு, ஜனவரியில் தமிழகச் சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்ற போது, "மதுவிலக்குக் கொள்கையை மத்திய அரசு இந்தியா முழுவதும் கொண்டு வந்தால் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சொல்கிறோம்" என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.

திமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், அண்டை மாநிலங்களைப் பின்பற்றி படிப்படியாகவாவது, மதுவிலக்கை அமல்படுத்துமாறு மிகுந்த கவலையோடு கேட்டுக் கொண்ட போது, அமைச்சர் நத்தம் விசுவநாதன் அதற்கும் மறுத்து விட்டார். ஆனால் தற்போது தேர்தல் வருகிறது என்றதும், மதுவிலக்குக் கொள்கையை மத்திய அரசு இந்தியா முழுவதும் கொண்டு வராத நிலையிலேயே, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கினைப் படிப்படியாகக் கொண்டு வருவோம் என்று ஜெயலலிதா சொல்வது ஊரை ஏமாற்றுவதற்காகத் தானே? இப்படிச் சொல்லி யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம்; தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது! தேர்தல் பிரச்சாரத்தில் திசை திருப்பும் திரிபு வாதத்தைக் கையிலெடுத்திருக்கிறார்; இறுதியில் ஏமாறப் போவது ஜெயலலிதா தான்!

English summary
Jayalalitha cheat the people by making false announcement on liqour ban, says Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X