முதல்வர் ஜெயலலிதாவிற்கு உட்கார, நடக்க பயிற்சி... விரைவில் வீடு திரும்புவார் - டாக்டர்கள் மகிழ்ச்சி
முதல்வர் ஜெயலலிதா எழுந்து அமரவும், நடக்கவும் பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சில வாரங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுந்து உட்காருவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவருக்கு நடக்கவும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதாவின் உடல்நிலை விரைவாக முன்னேறி வருவதால் இன்னும் சில வாரங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடுதான் என்று கூறப்பட்டதால் ஒரே நாளில் வீடு திரும்பிவிடுவார் ஜெயலலிதா என்று அதிமுக தொண்டர்கள் நம்பினர். இதோ 46 நாட்கள் ஆகிவிட்டது. ஜெயலலிதா நலம்பெற ஒருபக்கம் மருத்துவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் உள்ள அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதா நலம்பெற பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியே கூறியுள்ளார். ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று அவர் கூறினாலும் அம்மா முகத்தைப் பார்க்காமல் நாங்க போகமாட்டோம் என்று காத்திருக்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.
மருத்துவர்களின் தொடர் சிகிச்சை
லண்டர் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் மருத்துவ குழுவினரின் சிகிச்சை, சிங்கப்பூர் பிசியோ தெரபி மருத்துவர்களின் தொடர் சிகிச்சை காரணமாக, முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 45 நாட்களுக்கும் மேலாக, படுக்கையில் இருந்தபடி, சிகிச்சை பெற்றுள்ளதால், கை, கால்களை அசைக்க, பிசியோதெரபி சிகிச்சை தரப்படுகிறது. அந்த சிகிச்சையை, சிங்கப்பூரில் இருந்து வந்த, இரண்டு பெண் மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.
செயற்கை சுவாசம் நிறுத்தம்
நுரையீரல் நோய் தொற்று குணமாகி உள்ள நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட, செயற்கை சுவாசம் அவ்வப்போது நிறுத்தப்பட்டு, இயற்கையாக சுவாசிக்க, பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவே நல்ல முன்னேற்றம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
சுயநினைவு உள்ளது
முதல்வருக்கு சுயநினைவு நன்றாக உள்ளது என்றும் ஜெயலலிதா தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிகிறார். தனக்கு என்ன வேண்டும் என்பதையும் அவரே கேட்டு வாங்கி சாப்பிடுகிறார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
உட்கார, நடக்க பயிற்சி
ஜெயலலிதாவின் விரைவான முன்னேற்றம் டாக்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்போது அவருக்கு எழுந்து உட்காருவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. விரைவில் நடப்பதற்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகள் முடிந்து அவர் இயல்பாக நடக்கத் தொடங்கிய உடன் அவர் வீடு திரும்புவார் என்று நலம் விசாரிக்க வருபவர்களிடம் மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.
தொடரும் பிரார்த்தனைகள்
முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி பிரார்த்தனைகள் தொடர்கின்றன. அ.தி.மு.க. மகளிரணி சார்பில் கந்தசஷ்டி பூஜையும், லிங்க பைரவர் பூஜையும் நடைபெற்றது. அப்பல்லோ மருத்துவமனை வாசலில் உள்ள விநாயகருக்கு திங்கட்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட உள்ள சிகிச்சையில் சில மாற்றங்களை செய்யப்போவதாகவும், அவர் இயல்பாக தனது செயல்களை செய்யத் தொடங்கிய பின்னர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி வருவார்
நாள்தோறும் ஏராளமான அரசியல் பிரமுகர்கள், திரை உலக நட்சத்திரங்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர். அவர் நன்றாக எழுந்து அமர்ந்து நன்றாக நடந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் பிரதமர் மோடி சென்னை வந்து நலம் விசாரிப்பார் என்று பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.