ஜெ.மரணம்.. சகாயம் விசாரணை கோரிய மனுவை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் 75 நாள்கள் சிகிச்சை மேற்கொண்டபோது அவரை சந்திக்க சசிகலா தரப்பு யாரையும் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார். இதைத் தொடர்ந்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பொதுமக்களும், தொண்டர்களும் நம்புகின்றனர். அதேபோல் அவரது மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கோரியுள்ளார்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாஜி ஐஏஎஸ் அதிகாரி பாலமுருகன் வழக்கு பதிவு செய்திருந்தார்.
அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஒத்தி வைத்தது.