15 நிமிடத்தில் ஜெ.க்கு எம்பாமிங் செய்திருக்க முடியாதே.. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் பேட்டி!
ஜெயலலிதாவுக்கு எம்பாமிங் செய்வது 15 நிமிடங்களில் முடியாத விஷயம் என்று, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: 15 நிமிடத்தில் எம்பாமிங் செய்வது என்பது கடினம் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து சென்னையில் கடந்த மாதம் அப்பல்லோ மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல் உள்ளிட்டோர் பேட்டியளித்தனர்.
அப்போது ஜெயலலிதா உடல் பதப்படுத்தப்பட்டதா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க, பிரஸ் மீட்டுக்கு ஏற்கனவே, தயாராக கூட்டி வரப்பட்டிருந்த சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறு இயல் துறையின் இயக்குநர் சுதா சேஷய்யன் பதிலளிக்க தொடங்கினார்.
டிசம்பர் 5 இரவு
சுதா சேஷய்யன் கூறியதாவது: டிசம்பர் 5ம் தேதி இரவு 11.35 மணியளவில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஜெயலலிதா உயிரிழந்து விட்டதாகவும்,
அவரின் உடலை பதப்படுத்துவதற்கான குழுவை அனுப்பும்படியும் இருவரும் கூறினர். அதனைத் தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த குழுவினரோடு அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றேன்.
15 நிமிடங்களில் முடிந்தது
பொதுவாக எங்களது குழுவினர் எப்போதுமே இதுபோன்ற அழைப்புகளை எதிர்பார்த்து தயாராக இருப்பது வழக்கம் என்பதால், நாங்கள் அப்பல்லோவுக்கு, விரைந்து சென்றுவிட்டோம். மருத்துவமனையில்தான் உடலை பதப்படுத்துவதற்கான பார்மலின் திரவத்தைக் கலந்து தயாரித்தோம். அதன் பின்னர் பதப்படுத்துவதற்கான திரவம் ரத்தக் குழாய்களில் நிரப்பப்பட்டது. இதற்காக, ஜெயலலிதா உடலின் வலது காலில் சிறிய குழாய் செருகி அதன் வழியாக திரவத்தைச் செலுத்தினோம். சுமார் 15 நிமிஷங்களில் திரவத்தைச் செலுத்தும் பணி நிறைவடைந்தது.
கன்னத்தில் துளைகள்
பதப்படுத்துவதற்கான செய்முறைக்கு முன்பாக உடலை ஆராய்ந்தேன். ஜெயலலிதா உடலில் திசுக்கள் எதுவும் சேதமடையவில்லை.
அவரது உதடுகளிலும், மூக்கில் மட்டுமே ஓரிரு திரவ துளிகள் வெளியேறின. நீண்ட நாள் சிகிச்சை, படுக்கையில் இருந்ததால், அவரது உடலில் சிறிய சிறிய துளைகள் காணப்பட்டன. அதுதான் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது எடுத்த போட்டோவில் காணப்பட்டது. சமூக வலைதளங்களில் வெளியானது போன்று அவரது முகத்தில் பெரிய அளவிலான துளைகள் எதுவும் இல்லை.
போயஸ் இல்லம் போகும் முன்பு
முக்கிய நபர்கள் இறந்து, அவர்களது உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கும்போது உடல் கெட்டுப் போகாமல் இருக்கவும், அஞ்சலி செலுத்த வருவோருக்கு துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்கும் உடலைப் பதப்படுத்துவது வழக்கம். எனவேதான் ஜெயலலிதாவுக்கும் உடல் பதப்படுத்தப்பட்டது. 5ம் தேதி இரவு முதல் 6ம் தேதி அதிகாலை அவரது உடல் போயஸ் கார்டன் கொண்டு செல்லும் நேரத்திற்குள் இந்த நடைமுறைகள் நடந்து முடிந்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முடியாதே
ஆனால், சுதா சேஷய்யன் கூறியதை போல வெறும் 15 நிமிடங்களில் இறந்த ஒரு உடலை பதப்படுத்துவது என்பது முடியாத விஷயம் என்கிறார், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில். அவர் அளித்த ஒரு பேட்டியில், மேலும் கூறுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நீர்ச்சத்து, காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, பின் வேறு நோய்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்படி நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
உள்துறைக்கு அறிக்கை
அதேநேரம், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சந்தேகமிருந்தால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தெளிவு பெற வேண்டும். மக்கள் மத்தியில், தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். இதுவரை ஜெயலலிதா உறவினர்கள் யாரும், அவரது இறப்புக்கான காரணம் குறித்து, மருத்துவ கவுன்சிலில், புகார் அளிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட, சிகிச்சை முறை குறித்து, உள்துறை மற்றும் சுகாதார துறைக்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே தயாராக இருந்திருக்கலாம்
இறந்த உடலை பதப்படுத்த, சில மணி நேரங்களாகும். 15 நிமிடத்தில், 'எம்பாமிங்' செய்வதற்கு சாத்தியம் குறைவு. இதுதொடர்பான முழுமையான விளக்கங்களை, அத்துறை நிபுணர்களிடம் தான் கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் ரவிசங்கர் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டாலும், பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. அச்சட்டத்திலிருந்து இதுபோன்ற கேள்விகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே திட்டமிட்டு ஆயத்தம் செய்யப்பட்டால்தான் 15 நிமிடங்களுக்குள் எம்பாமிங் செய்திருக்க முடியும். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட, டிசம்பர் 4ம் தேதிக்கு பின்னரே ஒருவேளை இதற்கான வேலை ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்றார்.