அன்று ஜெயலலிதா போட்ட தீர்மானம்தான்.. இன்று 7 தமிழர்கள் விடுதலைக்கு முக்கிய காரணம்!
சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 7 தமிழர்களையும் விடுதலைக்கு கடந்த 2014-இல் சட்டசபையில் முதல்முறையாக ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியதே காரணமாகும்.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி வந்திருந்தார். அப்போது அவர் மனித வெடிகுண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயல், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் 2014-ஆம் ஆண்டு பிப் 18-ஆம் தேதி ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றியது.
தமிழக அரசு முடிவு செய்யலாம்
அத்துடன் 23 ஆண்டுகாலம் சிறையில் இருந்ததால் அவர்கள் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த கோரிக்கை தமிழகம் முழுவதும் வலியுறுத்தப்பட்டது.
தீர்மானம்
இதைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா 2014 பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மாநில அரசுக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தூக்கு ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் உடனே விடுதலை செய்ய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.
மற்றவர்களும் விடுதலை
அதேபோல் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை விடுதலை செய்யவும் முடிவு எடுத்துள்ளது. மேலும் ராஜிவ் வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யவும் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.
அனைவரையும் விடுதலை
இந்த முடிவு குறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவோம். மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் தெரிவிக்காவிட்டால் மாநில அரசு அனைவரையும் விடுதலை செய்யும் என்றார். இந்த நிலையில் 7 பேரை விடுதலை செய்வதை தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது. எனவே ஜெயலலிதா போட்ட தீர்மானம்தான் இன்று 7 தமிழர்கள் விடுதலைக்கு வித்திட்டுள்ளது.