ரயில்வே பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது.. வரவேற்கவும் செய்யலாம்: கலந்து கட்டும் ஜெயலலிதா
சென்னை: மத்திய ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அதேநேரம், சில அறிவிப்புகளை வரவேற்றுள்ளார் அவர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய ரயில்கள் குறித்தோ, புதிய ரயில்வே வழித்தடங்கள் குறித்தோ பட்ஜெட்டில் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய தமிழக திட்டங்கள் தொடர்பாக கடந்த 11ம் தேதி, பிரதமருக்கு கடிதம் எழுதியதியிருந்தேன். எனினும், அதில் தெரிவிக்கப்பட்டிருந்த திட்டங்கள் பற்றி எவ்வித அறிவிப்பும் வெளியாகாதது ஆச்சரியமளிக்கிறது.
அதேநேரம், ரயில்வே உதிரிபாக மையமாக சென்னை உருவாக்கப்படும் என்ற அறிவிப்பையும், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறேன்.
மேலும், டெல்லி - சென்னை இடையிலான சரக்கு ரயில் பாதைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும், பெண்கள் பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான கூடுதல் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளும் வரவேற்கத் தக்கவை. ரயில் கட்டணம் உயர்த்தப்படாதது வரவேற்கத் தக்கது. இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.