எம்.எல்.ஏ சீட் வாங்கி தருவதாக நீலாங்கரை பங்களாவில் பண வசூல்... கட்டம் கட்டிய ஜெ.
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிமுகவில் சீட் வாங்கித் தருவதாக கூறி நீலாங்கரை பங்களாவில் அதிமுகவினரிடம் லட்சக்கணத்தில் பணம் வசூலித்த அதிமுக நிர்வாகி சிவகாசி சிவகுமாரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலுக்காக திமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளில் வேட்பாளர் நேர்காணல் முடிந்து வேட்பாளர் பட்டியலை அரசியல் கட்சியினர் தயாரித்து வருகின்றனர். அதிமுக முகாமில் நடக்கும் சம்பவங்கள் ரகசியமாகவே இருக்க, ஆள் ஆளுக்கு பணம் வசூல் செய்து வருகின்றனர். ஐவரணி ஆதரவாளர்கள் பணத்தை வசூல் செய்வதாக புகார் வந்ததை அடுத்து, அவரது ஆதரவாளர்களை அடுத்தடுத்து பதவியை விட்டு நீக்கி வருகிறார் ஜெயலலிதா. இந்த நிலையில்
சிவகாசியைச் சேர்ந்த ஒரு கோஷ்டி சீட் வாங்கித் தருகிறோம் என்று வசூல் வேட்டையில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தக்காராக இருக்கும் ரவிச்சந்திரன் சமீபத்தில் ஆண்டாள் கோயிலுக்கு வந்த சசிகலாவின் அறிமுகம் கிடைக்க, அதைவைத்து ஒரு திட்டம் தீட்டியுள்ளார்.
ரவிச்சந்திரனின் உறவினரான சிவகாசி அதிமுக தொகுதிச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான சிவக்குமார் மற்றும் திருப்பரங்குன்றம் டிஎஸ்பியாக உள்ள ராமசாமி, ஒரு இன்ஸ்பெக்டர் ஆகியோர் அடங்கிய குழு சென்னை அருகே நீலாங்கரையில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து தங்கியது.
விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அதிமுக நிர்வாகிகளை போனில் அழைத்து, ஒரு சீட்டுக்கு பல லட்சங்களை வசூலித்துள்ளனர். உளவுத்துறை போலீசார் அதிரடியாக பங்களாவுக்குள் நுழைந்து அனைவரையும் கைதுசெய்தனர்.
அதிமுக சிவகாசி சிவக்குமாரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் ஜெயலலிதா. சில தினங்களுக்கு முன்பு ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் சிவக்குமார், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
நீலாங்கரை பங்களாவுக்குச் சென்ற விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.