அதிமுக தோற்ற தர்மபுரி, குமரி, திருவள்ளூர் மா.செக்கள் நீக்கம்... புதுவையிலும் களையெடுப்பு
சென்னை: அதிமுக தோல்வியடைந்த இடங்களில் மாவட்ட செயலாளர்கள் அதிரடி நீக்கப் பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளோடு அதிமுக களமிறங்கியது.
ஆனால், தமிழகத்தில் குமரி, தர்மபுரி லோக்சபா தொகுதிகளிலும், புதுவையிலும் அதிமுகவுக்கு தோல்வி தான் கிடைத்துள்ளது. இதனால் அதிமுகவின் நாற்பதுக்கு நாற்பது என்ற கனவு தவிடு பொடியானது.
இதன் எதிரொலியாக தர்மபுரி, குமரி, வடக்கு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் செயலாளர்களை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் முதல்வர்.
அதேபோல், புதுவையிலும் அதிமுக மாநில செயலாளர் அதிரடியாக நீக்கப் பட்டுள்ளார்.
இது குறித்து இன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஏ. சிவசெல்வராஜன், கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர் டி. ஜாண்தங்கம், திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் பி.வி. ரமணா, தருமபுரி மாவட்டச் செயலாளர் கே.பி. அன்பழகன் ஆகியோர் இன்று (மே 19) முதல் அப்பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படும் வரை கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கட்சிப் பணிகளை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ. தமிழ்மகன் உசேன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட கட்சிப் பணிகளை திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் வி. மூர்த்தி, தருமபுரி மாவட்ட கட்சிப் பணிகளை தலைமை நிலையச் செயலாளர் பி. பழனியப்பன் ஆகியோர் கூடுதலாக கவனிப்பார்கள் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலச் செயலாளர் மாற்றம்:
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் ஏ. அன்பழகன், புதுச்சேரி மாநில ஜெ. ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஓம்சக்திசேகர் ஆகியோர் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். புதிய மாநிலச் செயலாளர் நியமிக்கப்படும் வரை மாநிலப் பொறுப்பாளராக பி. புருஷோத்தமன் செயல்படுவார் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.