துணைவேந்தர் நியமனத்தில் லஞ்சம்: ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு
சென்னை: துணைவேந்தர் நியமனத்தில் லஞ்சம் பெற்ற ஆளுநர் ரோசையா முதல்வர் ஜெயலலிதாவிற்கும் பங்கு கொடுத்தார் என்று டிவி பேட்டியில் கூறிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று இளங்கோவன் மீது அவதூறு மனு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ‘தனியார் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 30ந் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக ஆளுநர் ரோசையா, துணைவேந்தர் நியமனத்தில் பணம் பெற்றதாகவும், அவ்வாறு வாங்கிய தொகையில், ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, மீதியை முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இது ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டாகும். வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அவதூறான குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இதனால், முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
தமிழக ஆளுநர் ரோசையாவை அவதூறாக விமர்சித்தது தொடர்பாக இளங்கோவன் மீது மே 11 ஆம் தேதி வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.