விஷு திருநாள்: மலையாள மக்களுக்கு வாழ்த்து சொன்ன ஜெ
சென்னை: விஷு திருநாளையொட்டி மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "புத்தாண்டு திருநாளாம் "விஷு" திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த "விஷு" தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழுகின்ற இடங்களில் எல்லாம் தங்கள் பண்பாட்டையும், பாரம்பரிய மரபுகளையும் விடாது பேணிப் பராமரிக்கும் மலையாள மக்கள் விஷு பண்டிகையன்று, அதிகாலை கண் விழித்து விஷுக்கனி கண்டு, புலரும் புத்தாண்டு செல்வமும், மகிழ்ச்சியும் கொழிக்கும் ஆண்டாக விளங்கிட வேண்டி இறைவனை மிகுந்த பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வழிபடுவார்கள்.
இத்திருநாளில் வீட்டிலுள்ள பெரியோர்களிடம் இளையவர்கள் ஆசி வேண்டுதலும், ஆசி வழங்கும் பெரியவர்கள், தங்களின் ஆசி வழங்கலோடு அன்பினையும் கலந்து பணப் பரிசு வழங்கும் நிகழ்வாகிய "விஷு கைநீட்டம்" காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும். இப்புத்தாண்டுத் திருநாளில் உற்றார், உறவினர் ஒன்று கூடி அன்பினைப் பகிர்ந்தும், அறுசுவை விருந்துண்டும் மகிழ்வுற்றிருப்பார்கள்.
இந்தப் புத்தாண்டில் மலையாள மக்கள் அனைவரும் எல்லா வளமையும், இனிமையும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை எனது "விஷு" திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.