வேழமுகத்தான் அருளால் உலகில் அன்பும் அமைதியும் நிலவட்டும்... ஜெ.வின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகல கணங்களுக்கும் தலைவனாகிய கணபதியாய், தடைகளைத் தகர்க்கும் விக்னேஸ்வரராய் விளங்கும் விநாயகப் பெருமானை வணங்கினால், வாழ்வில் வளம் பெருகும், அறிவு மிகும். துன்பங்களுக்கு காரணமான வினைகள் அகலும், தொடங்கிடும் நற்காரியங்கள் தங்குதடையின்றி சிறப்புடன் நடைபெறும் என்பது மக்களின் இறை நம்பிக்கையாகும். ஒவ்வொரு ஆண்டு ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளை மக்கள் பக்தியுடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
வேழமுகத்தான் அருளால், உலகில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.