"அம்மா" நன்றாக பேசுகிறார்.. அடுத்து நடக்கப் போகிறார்... உற்சாகத்தில் அதிமுக.. தொடரும் பிரார்த்தனை!
அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 65 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா நன்றாக பேசுவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிசியோ தெரபி சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், விரைவில் நடக்க பயிற்சி அளிக்கப்படும் என்றும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று மருத்துவமனையில் அட்மிட் ஆன ஜெயலலிதாவிற்கு நோய் தொற்று ஏற்பட்டது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள், சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்துள்ள பிசியோதெரபி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
மருத்துவர்களின் சிறப்பான சிகிக்சை, மக்களின் தொடர் பிரார்த்தனைகளினால் முதல்வர் ஜெயலலிதா தற்போது நலமுடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். கிரிட்டிக்கல் கேர் பிரிவில் இருந்து தனி அறைக்கு முதல்வர் ஜெயலலிதா மாற்றப்பட்டுள்ளதாக கூறிய பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா எழுந்து நடப்பதுதான் பாக்கி என்று தெரிவித்தார்.
உடற்பயிற்சி
இந்த நிலையில் சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர் மேரி சியாங் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடற்பயிற்சி அளித்து வருவதாகவும், ஒவ்வொரு உறுப்புகளுக்கும் வெவ்வேறு வகையில் பிசியோதெரபி உடற்பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடக்க பயிற்சி
முதல்வர் ஜெயலலிதா இன்னும் சில தினங்களில் தானே எழுந்து மெல்ல... மெல்ல... நடக்க பயிற்சி பெறுவார் என்றும் அவர் நன்றாக நடக்க முடிந்ததும், வீடு திரும்புகிறார் என்றும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஓரிரு வாரங்களில் முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்மா பேசுகிறார்
முதல்வர் ஜெயலலிதா நன்றாக பேசுவதாகவும், அவருக்கு என்ன உணவு வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து சாப்பிடுகிறார் என்று அப்பல்லோ வாசல் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார்.
தொடரும் பிரார்த்தனைகள்
பூரண குணமடைந்த முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை முன்பும், தமிழக ஆலயங்களிலும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக மகளிரணியினர் சார்பில் நடைபெற்ற பிரார்த்தனையில் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. மகளிரணி சார்பில் சிவன் பூஜை நடத்தப்பட்டது. அ.தி.மு.க. நிர்வாகிகள் அன்னதானமும் வழங்கினர்.