ஜெ. இட்லி சாப்பிட்ட விவகாரம்.. திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் உருவாகியுள்ள புதுச்சிக்கல்!
சென்னை: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, யாரையுமே பார்க்க அனுமதிக்கவில்லை என்றும், ஜெ. இட்லி சாப்பிட்டதாக நாங்கள் அப்போது கூறியது பொய் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளதால், இந்த விவகாரம் பல்வேறு கட்டங்களுக்கு நகரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடம் இதே மாதம் 22ம் தேதி சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில், அப்போதைய முதல்வரும், அப்போதைய அதிமுக பொதுச்செயலாளருமான, ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார்.
இதன்பிறகு, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவே மருத்துவமனை நிர்வாகமும், அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் பேட்டியளித்து வந்தனர்.
இட்லி சாப்பிட்டதாக பேட்டி
இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு, திடீரென உடல் நிலை மோசமாகிவிட்டதாக கூறி, டிசம்பர் 5ம் தேதி இரவு ஜெயலலிதா இறந்ததாக அப்பல்லோ அறிவித்தது. ஜெயலலிதாவுடன் மருத்துவமனையில் சசிகலா மட்டுமே இருந்ததால், அவர் சிகிச்சை பெற்றபோது என்ன நடந்தது என்பதெல்லாம் வெளி உலகிற்கு தெரியவில்லை.
ஆனால், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், இன்னும் பல உணவு வகைகளையெல்லாம் சாப்பிட்டார் என அமைச்சர்கள் பலரும், சி.ஆர்.சரஸ்வதி போன்ற அதிமுக பேச்சாளர்களும் பேட்டியளித்து வந்தனர்.
திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவுக்கு எதிராக இப்போது ஆட்சியிலுள்ள அதிமுகவினர் அணி திரண்டுள்ளனர். இந்த நிலையில், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை பார்க்க எங்கள் யாரையும் சசிகலா குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக அப்போது பொய் சொன்னோம். அதற்காக இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மதுரையில் நேற்றிரவு நடைபெற்ற அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
3 தொகுதி இடைத்தேர்தல்
அமைச்சரே இவ்வாறு கூறியுள்ளதால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக வெளியான அறிக்கையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. அதைவிட முக்கியமாக, ஜெ. மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் நடைபெற்ற அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் இடைத்தேர்தல் FORM B-யில் ஜெயலலிதா கைரேகையிட்டதாக கூறி அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு தேர்தலை நடத்தியது. அதிமுக வெற்றியும் பெற்றது.
தேர்தல் ரத்தாகிறதா?
ஜெயலலிதாவை யாருமே சந்திக்கவில்லை என்றால் இந்த கைரேகை விவகாரங்களின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகிறது. அப்படியானால், அமைச்சர் பேச்சை ஆதாரமாக கொண்டு 3 தொகுதிகளிலும் நடந்த தேர்தல்களை தேர்தல் ஆணையம் ரத்து செய்யுமா என்று நெட்டிசன்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.
சிசிடிவி விவகாரத்திலும் முரண்
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் என்னவென்றால், அப்பல்லோவிலுள்ள சிசிடிவி காட்சிகளை போட்டுக்காட்ட தயார் என்று டிடிவி தினகரன் குடகு ரிசார்ட்டில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ஆனால், இதுகுறித்த சர்ச்சை முன்பு எழுந்தபோது, அப்பல்லோ நிர்வாகமோ, சிசிடிவி எதுவுமே இல்லை என்று கூறியிருந்தது. இப்போது தினகரன் அல்லது அப்பல்லோ ஆகிய இரு தரப்பில் யார் உண்மையை கூறுகிறார்கள் என்ற கேள்வியையும் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் கேட்கத் தொடங்கியுள்ளனர்.