ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையே அதிமுக வெற்றிக்கு காரணம்: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: நரேந்திர மோடியின் நேர்மைக்கும் நாட்டின் மீதான பக்திக்கும் மக்களை அவர் நேசித்ததற்கும் பரிசளிக்கும் வகையில் 350 தொகுதிகளை மக்கள் தந்து வெற்றி பெறச் செய்துள்ளனர் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுகவின் அமோக வெற்றிக்கு முதல்வர் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையே காரணம் என்றும் அவர் புகழ்ந்துரைத்துள்ளார்.
நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் வழியில் மதுரையில் நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்த போது பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள மக்கள் பல ஆண்டுகளாக அரசியல் மாற்றத்தை விரும்பினார்கள். சுதந்திரம் அடைந்தது முதல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நாடு வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லப்படவில்லை.
இதை வெறுப்புடன் பார்த்த மக்கள், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்கினார்கள்.
அரசியல் மாற்றங்கள்
1977 முதல் அவ்வப்போது ஜனதா அரசு உள்ளிட்ட அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே அவை இருந்தன.
வாஜ்பாய் ஆட்சியில்
பாஜக அரசு வேண்டும் என்று மக்கள் விரும்பினாலும், அருதிப் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் இரு முறை முழுமையான ஆட்சியை நடத்த முடியவில்லை. ஆனாலும் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் அரிய பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. ஆகவே மீண்டும் பாஜக ஆட்சியை மக்கள் விரும்பினார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு
ஆனால், கூட்டணி அமைத்ததன் மூலமும், பொய் பிரச்சாரத்தின் மூலமும் கடந்த காலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று வந்தது. ஆனால் தற்போது காங்கிரசின் மீது மக்கள் அதிகமாக வெறுப்படைந்த நிலையில் பாஜகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.
மோடிக்கு பரிசளித்த மக்கள்
நரேந்திர மோடியின் நேர்மைக்கும் நாட்டின் மீதான பக்திக்கும் மக்களை அவர் நேசித்ததற்கும் பரிசளிக்கும் வகையில் 350 தொகுதிகளை மக்கள் தந்து வெற்றி பெறச் செய்துள்ளனர். காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வழி செய்த முதல் தேர்தல் இது.
மோடி மீது நம்பிக்கை
நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்து மக்கள் அளித்த வெற்றி. தமிழகத்தில் கன்னியாகுமரியிலும், தருமபுரியிலும் வெற்றி பெற்றதற்கு மோடி அலையே காரணம். மோடி அலை இருந்தாலும், தமிழகத்தில் ஆளும் அதிமுகவின் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் யுக்தி பாஜகவின் வெற்றியை தடுத்துள்ளது.
கூட்டணிக் கட்சிகள் தோல்வி
தோல்வி அடைந்தாலும் கூட்டணியில் இருந்த எந்த கட்சிகளையும் குறைகூற நாங்கள் விரும்பவில்லை. மோடிக்கு மக்கள் மீதிருந்த ஆதரவை பார்த்து புலங்காகிதம் அடையும் நேரத்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறாதது வருத்தமடைய செய்கிறது.
எதிர்பார்த்த தோல்வி
திமுகவின் தோல்வி எதிர்பார்த்த ஒன்றுதான். காங்கிரஸ் அரசின் தோல்விகளைத் தட்டிக்கேட்காத திமுக மீது மக்கள் இன்னும் கோபத்தில் உள்ளனர். இலங்கை தமிழர்களுக்கு துரோகம்இழைத்த காங்கிரசுக்கு துணை போன நிலையில் அக்கட்சி இந்த தோல்வியை சந்தித்துள்ளது. எனவே, திமுக அதன் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஊழலுக்கு எதிராக
காங்கிரஸ் ஊழலில் பங்கேற்ற திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். தமிழகத்தில் ஒரு தொகுதியைத் தவிர அனைத்திலும் காங்கிரஸ் டெபாசிட் இழக்கச் செய்து மக்கள் தண்டித்துள்ளனர்.
கன்னியாகுமரியில் காங்கிரஸ் டெபாசிட் பறிபோகாமல் இருக்க திமுக துணை போகியுள்ளது.
கூட்டணி தொடரும்
குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்காவிட்டாலும், தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இப்போதைய கூட்டணி தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்
சிறந்த நிர்வாகி ஜெ.
தமிழக அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக பாஜக உருவாகியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு முழு காரண கர்த்தாவாக இருப்பவர் முதல்வர் ஜெயலலிதா தான். அவரது திறமையான செயல்பாடும், தேர்தல் பிரசார யுக்திகளும் அவரது நம்பிக்கையும் அதிமுகவுக்கு வெற்றியை தந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை என்று பேசினார்.