இந்தியாவிற்கே பெருமை... தங்கம் வென்ற தீபிகா - ஜோஸ்னாவுக்கு ரூ. 50 லட்சம் பரிசு: ஜெ. அறிவிப்பு
சென்னை: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் பெண்கள் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த தீபிகா பல்லிகல்-ஜோஸ்னா சின்னப்பா ஜோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்களோடு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையும் அறிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஸ்குவாஷ் பெண்கள் இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல் - ஜோஸ்னா சின்னப்பா ஜோடி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
இந்நிலையில், தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தீபிகா பல்லிகல், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள பாராட்டு கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது :-
மகிழ்ச்சி...
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று உள்ளீர்கள். உங்களுடைய விளையாட்டு வாழ்க்கையில் இது மேலும் ஒரு சிறப்பான வெற்றி என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவிற்கே பெருமை...
காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டில் இந்தியா முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்றுள்ளது என்பதை அறிகிறேன். இதன் மூலம் நீங்கள் இருவரும் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து உள்ளீர்கள்.
இதயம் கனிந்த வாழ்த்து...
வியக்கதக்க சாதனைகளை புரிந்த உங்கள் இருவருக்கும் தமிழக மக்கள் சார்பில் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை...
காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி 2011-ம் ஆண்டு டிசம்பரில் உத்தர விட்டேன் என்பது உங்களுக்கு தெரியும். தற்போது இந்த பரிசு தொகையை பெறுவதற்கு நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்...
உங்களது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நான் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை படைத்து தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் புகழ் சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.