கோட்டைக்கு வந்த ஜெ… கூட்டுறவு பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகளை வழங்கினார்
சென்னை: கூட்டுறவு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீடு விரிவாக்க திட்டத்தினை துவக்கி வைப்பதன் அடையாளமாக மூன்று கூட்டுறவு பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகளை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்காக பணியாற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவு வேளாண் விற்பனைச் சங்கங்கள் ஆகியவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள், அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை தங்களுக்கும் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையினை பரிவுடன் ஏற்று, அரசு ஊழியர்களுக்காக தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா 1.8.2014 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதன்படி, கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு பணியமர்த்தம் செய்யப்பட்ட 6245 கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பொது விநியோகத் திட்ட விற்பனையாளர், கட்டுநர் உள்ளிட்ட 41,061 சங்கப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சுமார் 1,14,986 நபர்கள், என மொத்தம் 1,56,047 நபர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் கூட்டுறவு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீடு விரிவாக்க திட்டத்தினை துவக்கி வைப்பதன் அடையாளமாக மூன்று கூட்டுறவு பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பொது விநியோகத் திட்ட விற்பனையாளர், கட்டுநர் உள்ளிட்ட சங்கப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு இணையாக மருத்துவ காப்பீடு வசதியினை பெற்றுக் கொள்ளும் வகையில் இத்திட்டத்திற்கான ஆண்டு தவணைக் கட்டணம் 2,120 ரூபாய் கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களாலும், அவர்கள் பணிபுரியும் கூட்டுறவு சங்கத்தாலும் சரிபாதியாக பகிர்ந்து கொள்ளப்படும்.
மேலும், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில், பண்ணைசாராக் கடன் திட்டத்தின் கீழ் பல்வேறு நோக்கங்களுக்காக கடனுதவி பெற்று, நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ள கடன்தாரர்கள் பயனடையும் வகையில் அனைத்து பண்ணைசாராக் கடன்களுக்கான கூடுதல் வட்டி மற்றும் அபராத வட்டித் தொகையைத் தள்ளுபடி செய்யும் வகையில் "ஒரு முறை கடன் தீர்வு திட்டத்தினை" செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 180 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் பல்வேறு நோக்கங்களுக்காக பண்ணைசாராக் கடன் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்ற 5,741 பயனாளிகள் நீண்டகாலமாக கடனைத் திருப்பிச் செலுத்த இயலாததால் அசல், வட்டி மற்றும் கூடுதல் வட்டி ஆகியவற்றைச் சேர்த்து 299 கோடியே 80 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. எனவே, இவர்கள் பெற்ற கடனைத் தீர்வு செய்ய ஏதுவாகவும், கடன்தாரர்கள் பெற்ற அசல் தொகைக்கான கூடுதல் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி பெற்று பயனடையும் வகையிலும் "ஒருமுறை கடன் தீர்வுத் திட்டத்தினை" துவக்கி வைப்பதன் அடையாளமாக முதல்வர் ஜெயலலிதா இரண்டு பயனாளிகளுக்கு ஒரு முறை கடன் தீர்வு திட்ட சான்றிதழ்களை வழங்கி துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் 31.3.2014 அன்று உள்ளபடி, தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் நிலுவையில் உள்ள பண்ணைசாராக் கடன்கள் அனைத்திற்கும் நிலுவையில் உள்ள அசல் மற்றும் வட்டியினை முழுமையாகச் செலுத்தி தீர்வு காணலாம். அவ்வாறு தொகையினைத் திருப்பிச் செலுத்தும் கடன்தாரர்களுடைய கூடுதல் வட்டி, அபராத வட்டி மற்றும் வசூல் தொடர்பான இதர செலவினங்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.
மேலும், கடன்தாரர்கள் செலுத்தவேண்டிய அசல் மற்றும் வட்டித் தொகையில் 25 சதவிகித தொகையை 3 மாத காலத்திற்குள் செலுத்தி, வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு மீதமுள்ள 75 சதவிகித தொகையை 6 மாத காலத்திற்குள் செலுத்தியும் கடனைத் தீர்வு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ், பண்ணைசாராக் கடன்களை நீண்ட காலமாக திருப்பிச் செலுத்த இயலாத 5,741 பயனாளிகளுக்கு 166 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவிற்கு வட்டிச் சலுகை வழங்கப்படும்.