"நான்கு மாதத்தில் ஜெயா நினைவில்லம் ரெடி" - சென்னை கலெக்டர் அறிவிப்பு
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் இன்னும் நான்கு மாதங்களில் நினைவில்லமாக மாற்றப்படும் என சென்னை ஆட்சியர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: பல்வேறு அரசு துறையினர் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்று பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும், அதனால் இன்னும் நான்கு மாதங்களில் ஜெயலலிதாவின் நினைவில்லம் தயாராகி விடும் என சென்னை ஆட்சியர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துக்கொண்டு வரும் நிலையில், மறுபக்கம் சத்தமே இல்லாமல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவில்லமாக மாற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஆட்சியர் அன்புச்செல்வம், ஜெயலலிதாவின் முன்னாள் வாரிசு யார் என்று தெரியும் வரை நாங்கள் காத்துக்கொண்டிருக்க மாட்டோம். இந்த இடத்திற்கான மதிப்பை கணக்கிட்டு அதற்கு பணத்தை நாங்கள் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்து விடுவோம். வாரிசு யார் என்று முடிவாகிறதோ அவர்கள் அந்த பணத்தை நீதிமன்றத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.
வேதா இல்லத்தில் சில அறைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் பூட்டுப்போட்டு சீல் வைத்துள்ளனர். அதனால் அவற்றின் மதிப்பு தெரியவில்லை, விரைவில் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் அந்த அறையை நாங்கள் அளப்போம். அதன்பின் இந்த வீட்டின் தற்போதைய மார்க்கெட் மதிப்பு தெரியவரும், 20பேர் கொண்ட குழு இந்த பணியில் ஈடுபட்டுள்ளது.
விரைவில் இந்த பணிகள் முடிவடைந்தவுடன், நினைவில்லமாக மாற்றும் பணி தொடங்கும், இந்த பணி நான்கு மாதங்களில் நிறைவடைந்து அதன் பின் அரசின் ஆணைப்படி மக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என்றும் ஆட்சியர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.