பாத்ரூமில் செப்.22 இரவு ஜெ. தவறி விழுந்து உதவி கேட்டார்: சசிகலா வாக்குமூலம்
செப்டம்பர் 22ஆம் தேதி இரவு ஜெயலலிதா பாத்ரூமில் தவறி விழுந்தார் என ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: செப்டம்பர் 22ஆம் தேதி இரவு ஜெயலலிதா பாத்ரூமில் தவறி விழுந்தார் என ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பின. இதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.
சசிகலா பிரமாண பத்திரம்
அந்த கமிஷன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர்கள், சசிகலா குடும்பத்தினர், ஜெயலலிதாவின் உதவியாளர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சசிகலா தரப்பில் விசாரணை கமிஷனில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
தவறி விழுந்த ஜெ.
55 பக்கங்களை கொண்ட அந்த பிரமாண பத்திரத்தில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா தவறி விழுந்ததாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தாங்கலாக
பாத்ரூமில் தவறிவிழுந்த ஜெயலலிதா தம்மிடம் உதவி கேட்டதாக தெரிவித்துள்ள சசிகலா, ஜெயலலிதாவை கைத்தாங்கலாக படுக்கைக்கு கொண்டுவர தான் உதவியதாகவும், படுக்கையில் ஜெயலலிதா மயங்கி விழுந்ததாகவும் அவர் கூறினார்.
அப்பல்லோ ஆம்புலன்ஸ்
உடனடியாக டாக்டர் சிவகுமார் உட்பட 2 பேர் கொண்ட மருத்துவர்கள் வீட்டுக்கு வந்து சிகிச்சை அளித்ததாக பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பாதுகாவலர் 2 பேர் மற்றும் கார் ஓட்டுநர் உடனடியாக அழைக்கப்பட்டதாகவும் அப்பல்லோவுக்கு தகவல் கூறியபின் ஆம்புலன்ஸ் வந்ததாக சசிகலா தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
சுயநினைவு திரும்பியது
மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் ஜெயலலிதா வீட்டில் மயங்கிய நிலையில் இருந்ததாகவும் ஆம்புலன்ஸில் ஏற்றிய பின் சுயநினைவுக்கு திரும்பியதாக பிரமாணப்பத்திரத்தில் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.