ஜெயலலிதா இட்லி சாப்பிட்டாரா? அவர் திராட்சைதானே சாப்பிட்டார்... தீபக் கூறும் அப்பல்லோ நிமிடங்கள்!
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது யாருடைய உத்தரவின் பேரில் அவருக்கு அளித்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை : ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக யார் சொன்னது, அவர் திராட்சை சாப்பிட்டதை நான் நேரில் பார்த்தேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கேட்டுள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அளிக்கப்பட்ட சிகிச்சை முறை மற்றும் உடன் இருந்தவர்கள் குறித்து தமிழ் தொலைக்காட்சிக்கு தீபக் அளித்த சிறப்புப் பேட்டி: முதல்முறை நான் அப்பல்லோ மருத்துவமனை வரும்போது எவ்வளவோ முயற்சி செய்தேன், என்னை விடவில்லை. நான் யார் என்று கட்சிகாரர்களுக்குத் தெரியாததால் என்னை அனுமதிக்கவில்லை. நான் என் அக்கா மாதிரி சண்டையிடாமல் என்னை தொலைபேசியில் அழைத்தவரை தொடர்பு கொண்டு பேசினேன்.
செப்டம்பர் 23ம் தேதி நான் மருத்துவமனைக்கு சென்றேன், உடனடியாக நான் அத்தையை பார்க்க முடியவில்லை, இரண்டு நாட்களுக்குப் பிறகு அத்தை முழு உடல்நலனுடன் இருந்தார். நான் மருத்துவமனையில் போயஸ் கார்டனில் பணியாற்றியவர்கள் மற்றும் சசிகலா மட்டுமே உடனிருந்தார். முதன்முதலில் அவர் மருத்துவமனை சென்ற போது முழுநினைவோடு இல்லை, 3வது நாள் அவர் சுயநினைவோடு இருந்தார் திராட்சை சாப்பிட்டார் என் கண்களாலேயே பார்த்தேன்.
பாதுகாப்பு ஏன் விலக்கப்பட்டது?
அப்பல்லோ மருத்துவமனையில் இதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளன. அத்தையின் உடல்நலன் குறித்து மருத்துவர்கள் எனக்கு கூறவில்லை, சசிகலா தான் என்னிடம் விளக்கிக் கூறினார். ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட ஒருவர் கூட மருத்துவமனையில் இல்லை, அந்த பாதுகாப்பு ஏன் விலக்கிக் கொள்ளப்பட்டது, இதை வேண்டாம் என்று யார் சொன்னது.
சசி குடும்பத்தினர் உடன் இருந்தனர்
60 நாட்களில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது அவரது அறைக்கு வெளியேயோ அல்லது மருத்துவமனையை சுற்றியோ அவருக்கு வழங்கப்பட்ட Z ப்ளஸ் பாதுகாப்பு இல்லவே இல்லை. மருத்துவமனையில் இளவரசியின் மகள் சகி, கிருஷ்ணபிரியா மற்றும் அவர்களுடைய கணவன்கள் இருந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு தான் தினகரன் மற்றும் டாக்டர் வெங்கடேஷ் வந்து ஒட்டிக்கொண்டனர். திவாகரனின் மகளும் அவருடைய கணவரும் தொடர்ந்து மருத்துவமனை சென்று ஜெயலலிதா உடல்நலன் குறித்து கேட்டறிந்து வந்தனர். அதே போன்று டாக்டர் சிவகுமாரும் மருத்துவமனையில் சிகிச்சை குறித்து முழுவதும் கேட்டு வந்தார்.
திராட்சை சாப்பிட்டார்
ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சையில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஜெயலலிதா இல்லையென்றால் சசிகலா இல்லை என்பதாலேயே சசிகலா அவருடைய கணவரை விட என்னுடைய அத்தையை நல்ல முறையில் கவனித்துக் கொண்டார். ஜெயலலிதா மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டாங்க என்று யார் சொன்னது? அவங்க திராட்சை சாப்பிட்டதை நான் பார்த்தேன். ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் ஜெய் ஹனுமான் தொடரை பார்த்து மகிழ்ந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் நல்ல நிலையில் இருந்தார் என்பதற்கு எல்லா ஆதாரங்களும் உள்ளன.
அமைச்சர்கள் யாரும் விரும்பவில்லை
நான் மருத்துவமனையில் உடனேயே இருந்தேன். அமைச்சர்கள் எல்லோருமே இரண்டாவது தளத்தில் தான் இருந்தனர், அவர்கள் யாருமே ஜெயலலிதாவை பார்க்க வேண்டும் என்று கேட்கவில்லை. ஓ. பன்னீர்செல்வம் உள்பட அனைவருமே சசிகலா அனைத்தையும் பார்த்துக் கொள்ளட்டும் என்றனர். என் கண் முன்னே ஓ.பன்னீர்செல்வம் திவாகரனிடம் கூறினார் எனக்கு முதல்வர் பதவி வேண்டாம், சசிகலாவே முதல்வராக இருக்கட்டும் என்று கூறினார்.
நான் தான் கொடுப்பேன்
ஜெயலலிதாவின் வீட்டை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளிப்பதில் எனக்கு கஷ்டம் இல்லை. ஆனால் அது நான் தான் கொடுக்க வேண்டும், தமிழக அரசோ, பாஜக அரசோ இதைச் செய்யக் கூடாது. நான் அந்த சொத்திற்கு உரிமையுள்ளவன், ஆனால் இதுவரை அரசு என்னை தொடர்பு கொண்டு இனிவரை பேசவில்லை என்று தீபக் தெரிவித்துள்ளார்.