ஒரு நல்ல தலைவரைக் கூட உருவாக்கலையே ஜெயலலிதா!
Recommended Video
சென்னை: ஒவ்வொரு பெரும் தலைவர்களும் தங்களது வாரிசுகளை விட்டுச் சென்ற வரலாற்றைத்தான் இத்தனை காலம் தமிழகம் பார்த்துள்ளது. ஆனால் ஒரு வாரிசைக் கூட தனது கட்சிக்கோ அல்லது தமிழகத்துக்கோ தராத ஒரே தலைவர் ஜெயலலிதாதான்.
பெரியாரின் வாரிசுகள் பலர். அண்ணாவுக்கு அருமையான வாரிசாக கருணாநிதி உருவெடுத்தார். அவரது வாரிசாக மு.க.ஸ்டாலின் களத்தில் உள்ளார்.
எம்.ஜி.ஆரின். பிரமாண்ட வாரிசாக ஜெயலலிதா உருவெடுத்தார். அவர் தவிர பல குட்டித்தலைவர்களும் கூட உருவாகினார்கள். ஜெயலலிதா அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட திருநாவுக்கரசர் போன்றோர் இன்றும் கூட லைம்லைட்டில்தான் உள்ளனர்.
ஜெ. வாரிசு எங்கே
ஆனால் ஜெயலலிதாவின் வாரிசு என்று ஆளுமை மிக்க யாரையுமே பார்க்க முடியவில்லை. ஜெயலலிதா மறைந்து ஒரு வருடமாகி விட்டது. இன்று வரை அவரது வாரிசாக யாரையுமே நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
உருவாக்கியிருந்தால்தானே
உண்மையில் ஜெயலலிதா தனக்கான வாரிசு என்று யாரையுமே உருவாக்கவில்லை. யாரையுமே அவர் தலைவராக கருதவில்லை. யாரையுமே வளர்க்க விரும்பவில்லை. வளரவும் விட்டதில்லை.
வெட்டி விலக்கி விட்டவர்
யாராவது தலை தூக்குவதாக தெரிந்தால் அவர்களை விரட்டி விட்டவர், வெட்டி விட்டவர் ஜெயலலிதா. தனக்கு நிகராக யாரையும் அவர் நினைத்ததில்லை. தனக்கு அடுத்து கூட யாரும் இருக்கக் கூடாது என்றும் செயல்பட்டவர் ஜெயலலிதா என்பதே நிதர்சனம்.
அடப் பாவமே நிலையில் அதிமுக
தனக்குப் பின்னர் இந்தக் கட்சியே இருக்கக் கூடாது என்று நினைத்தாரோ என்னவோ இன்று சரியான தலைவர் இல்லாமல், தலைவர் என்று யாருமே இல்லாத நிலையில் அதிமுக உள்ளது. இவர்தான் அதிமுகவின் தலைவர் என்று யாரையுமே கூற முடியவில்லை. நிச்சயம் இந்தக் கட்சியின் எதிர்காலம் என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான்.
ஆச்சரியமான தலைவர்
கடைசி வரை தனக்கு அடுத்த நிலை தலைவரை உருவாக்காமலேயே மறைந்து போயுள்ளார் ஜெயலலிதா. வழக்கமான தலைவராக இவரைப் பார்க்க முடியவில்லை. ஒரு Bizarre தலைவராக மட்டுமே இவரை பார்க்க முடிகிறது.